Sunday, September 13, 2009

கவிதை இறகு-புரட்டாசி


வண்டுகடி பூ நிற
மதிப்பெண் அட்டை நீட்டி
" கையெழுத்து வாங்கிட்டு
வரச்சொன்னாங்க சாரு "
அழுக்குடன் வெய்யிலில் கிடந்ததால்
மடமடத்து நிற்கும்
பாவாடை கசக்கி நிற்பேன்.


"எதுக்குத்தா .. இதுல என்ன போட்டிருக்காக? "
"நான் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கேன்னு
போட்டிருக்காங்க "
"ஆமா .. அதாம் நமக்குப் படியளக்கப் போவுது..
கோட்டையில பொண்ணுபொறந்தாலும்
போட்ட புள்ளி தப்பாதுனு
எங்கிட்டுப் போயி இழுபடப் போவுதோ ..
அங்கிட்டு வீசிட்டு
ஆவுற சோலியப் பாப்பியளா "
கொல்லையிலிருந்து
முள் நறுக்கிக்கொண்டு
கத்தும் அம்மா

" நீ கையெழுத்துப் போட்டா நேரமாயிரும்
மை தடவுறேன் ... ரேக வையுப்பா "
" நான் என்ன கையெழுத்துப் போடத் தெரியாதவனா ?
கையெழுத்துப் போட்டுத்தான் ஓட்டுகூட போட்டேன் "
பேனா பதிப்பார், கலப்பை போல் அழுத்தி...
அட்டை கிழிந்து அடி வாங்கும் பயத்தில்
துடிக்கும் மனசு

உச்சி வெயிலில் " பட்" டென வெடிக்கும்
உளுத்தம் நெத்தாய்
"சடக்" கென முகம் நிமிர்த்தி
சந்தேகம் கேட்பார்
"வழிவிட்டான் மவன் சன்னாசின்னுதானத்தா
போடணும் ? "
" வ போட்டு புள்ளி வச்சு
ஒம் பேர எழுதுப்பா நேரமாவுது "

" அந்த சிலேட்டுப் பலகையை எடுத்து
எம்பேர எழுதுத்தா
பாத்து பாத்து வெரசா எழுதிர்றேன் "
மாடொன்றைத்
தவறவிட்டு வந்து
பண்ணையார் முன் நிற்கும்
மேய்ப்பவராய்த்
தாழும் அவர் குரல்

" இதுக்குத் தான் அப்பவே சொன்னேன்
ரேகை வையுன்னு "
எழுதி வைக்கும் பெயரைப்
பாத்து பாத்து எழுதிக் கொண்டிருக்கும் போது
போதாமல் போய்விடும் இடம்
" அடுத்த கோட்டுல மடிச்சி எழுதவா "
அழுகை வந்துவிடும் எனக்கு

" அடுத்த பரிச்சைக்கித்தான்
அங்க எழுதணும் "
அட்டையைப் பறித்துக் கொண்டு
அவர் பெயரில் குறையும்
ஓரெழுத்தையோ .. ரெண்டெழுத்தையோ
மதகில் அமர்ந்து நானே எழுதி
"போன தடவை மாதிரி
எல்லார்கிட்டயும் காட்டி
சொல்லிச் சிரிக்காம இருக்கணுமே
சுப்ரமணிய சாரு "
கவலையோடு நுழைவேன் வகுப்பிற்குள்.

-கவிதாயினி இளம்பிறை.

2 comments:

  1. மனதைத் தொடும் கவிதை இது....நன்று தமிழ்இனிது (உங்களது பெயர் எங்கும் இல்லை..அதனால் தமிழ்இனிது என்றே அழைக்கிறேன்).. என்னுடைய பதிவின் தலைப்புக்கூட தமிழ் இனிது தான் .. :) ..தொடர்க ..மீண்டும் சந்திப்போம் .. :)

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கு நன்றி !

    ReplyDelete