Wednesday, April 27, 2011

என் ஏழுக்கழுதைகள்


எனக்கு ஏழுக்கழுதை வயசாகிவிட்டது
வளர்ந்து நடைபழகிய நாலாவது மாசம்,கக்குவான் பயத்தில்
பாலாடைக்கட்டியில் அம்மா கழுதைப்பால் ஊட்டிய தேதியில்-
என் முதல்கழுதையோடு நான் சிநேகிதம் கொண்டேன்

பசங்களோடு தள்ளுமுள்ளு நடத்தி
பள்ளிச்சீருடையில் தார்பூசி கொண்டதற்காக
அப்பா சுண்டுவிரல் பிடித்தப்போய்
வண்ணாந்துறைக் குட்டிக்கழுதைக்கு நான் பெயர்ச்சூட்டி
அழைத்த அன்றைக்கு- என் வயிற்றுகுள்
இரண்டாவது கழுதை வளர ஆரம்பித்தது

உடும்புப்பிடியவிழ்க்க ஏழுகழுதைகள் காதில்
கட்டெறுப்பை கடிக்கவிட்டு
உரக்கக் கத்திய பின், பிடியவிழுக்கும் தந்திரம் பற்றிப்
பாட்டி கதைவிட்ட அன்று
என் மூன்று கழுதைகளை உறவுக்கு விட்டேன். என்
நாலாவது கழுதையோடுதான் பாரதி அக்ரஹாரத்திற்குள் நுழைந்தான்

ஜான் ஆப்ரஹானை படித்தக் காலத்தில்
எனக்கு ஐந்துகழுதை வயசு பூர்தியாகிவிட்டது
என் ஆறாவது கழுதை வளர்ந்ததும்
ஓட்டிக்கொண்டு நகரத்திற்கு வந்துசேர்ந்தேன்

இப்போது என் ஏழாவது கழுதை
மேஜையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறது
தீரா ஆசையை,
தீர்ந்த வாழ்க்கையை

-கடற்கரய்.

No comments:

Post a Comment