Friday, August 13, 2010

ஊஞ்சல்...!

மாமரத்திலலையும்
எனது ஊஞ்சலுக்கு
என்னவாகிற்று என்றறிய
பதறுகிறது மனசு!!!
நம்
பதுங்கிடங்களில்
பிணங்களிருப்பதாய் சொல்கிறார்கள்

என் ஸ்நேகிதிகளில்
யாரேனும்
மிச்சமிருக்கிறார்களா???

பெண்ணைப்பெற்ற
அம்மாக்களெல்லாம்
அழுதார்கள்!!!
அழகாய்ப் பெற்றதால் - நீ
அதிகமதிகமாய் - அழுதாய்

ஆயுதமுனைகளில்
கற்பு களவாடப்பட்ட
கர்மம்பிடித்த
வாழ்க்கை - அது !!!

தமிழர் என்கிற
ஒற்றைக் காரணத்தில்
காலம் நம்மை
அடித்துத்துவைத்து ...!
மனசெல்லாம் - காயம் !!!
திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கபடுகிறதாமே ?
எனது திருமணம் ...
யுத்தத்தில் நிச்சயிக்கப்பட்டது
என்னைக்காப்பதற்கென
நீ - அறிந்த
மாற்றுவழி
வெளிநாட்டுமாப்பிள்ளைக்கு
மணமுடித்து வைப்பதுதான் !!!

அம்மா ...
காலத்தின் கலவரத்தால்
வெளிநாடுநோக்கி
என்னை துரத்தியடித்தாய் ...

ஊஞ்சலை ...
ஊரை ....
உன்னை
........................................
தொலைத்துவிட்டு
அவஸ்தைப்படுகிறது மனசு
ஒரு - அநாதைத்தேசத்தில்!!!

வாழ்வின் முகவரிமாறி
நெடுநாளாயிற்று
ஒரு ஆயுட்கைதியைப்போல்
அந்நிய தேசத்தில்
வாசிக்கப்படுகிறதென் வாழ்க்கை !!

தூசு படியாத்தெருக்கலும்...
'ஏசி' அறைகளும் ....
பனிவடியும்
பகல்களுமாய்....
ரசிப்பதற்கு
ஏராளமிருக்கின்றன ....!!!
மனசு என்னமோ
மாமரத்து ஊஞ்சலில்
பிடிவாதமாய் அலைகிறது ...!!!

தெருவில்
எச்சில்துப்பினாலும்
தண்டிக்கிறார்கள் - இங்கே
ஊர்த்தெருவெங்கிலுமாய்
இரத்தமும், சதையும்
சிதறிக்கிடந்தாலும்
கண்டுகொள்வதில்லை
நமதூரில் !!!

பிரச்சினை
ஓய்ந்ததாய்ச் சொல்கிறார்கள்
நான் வருவேன்
மிகமிக சமீபத்தில்

என் குழந்தைகளை
கையோட அழைத்தபடி
நம் கலாச்சாரம் மாறாமல்
நான் வருவேன்!!!
என் ஸ்நேகிதிகளின்
இரத்தமும் சதையும்
சிதறிக்கிடக்கும்
தெருக்களின் - மீது
என்னை அழைத்துச்செல்ல
நீ - வருவாய்
அலையும் ஆத்மாவாய்!!!

அம்மாவினதும்
என் ஸ்நேகிதிகளினதும்
ஆத்மாக்களோடு
நானும் குழந்தைகளும்
கணவருமாய்
என் மாமரத்து ஊஞ்சலில்
ஆடிக்கொண்டேயிருப்போம்!!!

- றஹீமா பைஷால்.

No comments:

Post a Comment