Wednesday, August 25, 2010

இலையசைத்து அவளை ஆசீர்வதிக்கிறேன்

….இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
…வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறை வைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும் ஒரு ஆலமரம்.
…என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.

அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.

ஒரு சிறுமி கேட்கிறாள்,
‘இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?’
பதில் வருகிறது.

‘அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது’
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
‘பூமியில் வைத்தால்தானே வளர முடியும்’
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
‘பெண்ணே நீ ஆலமரமாவாய்!’

-வத்ஸலா.

No comments:

Post a Comment