Wednesday, August 18, 2010

கவிதை இறகு-ஆவணி

அம்மா,
அஞ்சுநிமிஷம் பொறு என்று
அடுத்தொரு முறை சொல்லாதே.
நீ பொறுக்கச் சொல்வது
முந்நூறு செகண்டுகள்
புரிய மாட்டேனென்கிறது உனக்கு
கவர்பால் வரவில்லையா?
கருப்புக்காபி கொடு
குடிக்கிறேன்
தீய்ந்த தோசையோ
உப்புப் போட மறந்துபோன உப்புமாவோ
ஏதோ ஒரு எழவு - தட்டில் வை.

நிதானமாய் சாப்பிட முடியாது
எட்டு மணிக்குப் பசிக்காமலிருக்க
ஐந்தரை மணிக்குத் தின்கிறேன்
இதிலென்ன நிதானம் வேண்டிக் கிடக்கிறது

டிபனைக் கட்டு.
ஐயோ, பித்தளைத் தூக்களவு வேண்டாம்
மூணு பிடியென்றால் பிண்டப் ப்ரதானமென்பாய்
நாலு பிடி வை.

வாட்டர் பாட்டிலைக் கொடு
வக்காளவோளி நாட்டில்
குடிக்கிற தண்ணீரைக் காசு பண்ணுகிறான்
கும்பலான இடமானால்
ஒண்ணுக்குப் போனாலும் காசு கொடுக்கணும்
அடுத்த பஸ்ஸில் போகமுடியாது
மூன்றாவது லேட்டுக்கு
மூதேவி கம்பெனியில்
அரைநாள் சம்பளம் அம்பேல்

ஒப்பித்து மாளவில்லை
அம்மா,
பொறுமையாய்
மெதுவாய்
நிதானமாய் - அப்பா காலத்துடன் போய்விட்டது.

இது என் காலம்
வெள்ளென எழுந்திரு
சீக்கிரம் சமை
வேகமாய் டிபனைக் கட்டு
வரட்டுமா -

பாவம் அம்மா...

- லாவண்யா.
"இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்"

No comments:

Post a Comment