Tuesday, July 27, 2010

ஒரு பழைய வீடு

இந்த வீடு மிகவும் சிறியதுதான்
இதன் வெளிப்புறச் சாயங்கள்
மங்கிப்போய் விட்டன
சுவர்கள்
சரியத் தொடங்கி விட்டன
இன்று யாரும்
இங்கு வசிப்பதில்லை
இந்தத் தெருவாசிகளுக்கு
இதுவும்
மற்றொரு
பாழடைந்த வீடு

சுவாசத்தைச் சற்று அடக்கி
ஒட்டடைகளைச் சிறிதே விலக்கிக்
கொஞ்சம்
உள்ளே வாருங்கள்

இந்தத் தூசிபடிந்த தரையில்
காடாகி விட்ட
இக்கொல்லைப்புறத்தில்
இன்னும்
இவ் வாசற்படிகளில்
திண்ணையில்
சற்றுக் கவனமாய்ப் பாருங்கள்

சிறிதும் பெரிதுமாய்ச்
சில காலடிகள் தெரியவில்லை ?
மனிதர்கள் வாழ்ந்த
இடம்தான் இது

இந்தக் குழந்தைகள் வளர்ந்தும்
பெரியவர்கள் இறந்தும்
காணாமல் போய் விட்டார்கள்
உண்மைதான்

ஆனாலும்
தடங்களை முழுக்க
இவர்களால்
அழித்துவிட முடியவில்லை

இந்தக் காரை உதிரும் சுவர்களில்
சிவப்புத் தொப்பியணிந்த
போலீஸ்காரன் படங்களும்
கரடி
ரயில்
டில்லி களும்
இன்னமும் மங்கலாய்
எனக்குத் தெரிகின்றன

இந்த மாட்டுத் தொழுவத்தைத்
தாண்டுகையில்
மார்கழி மாதப்
பறங்கிப்பூ மணம்
வீசவில்லை ?

இன்னும் இன்னும் ...
அங்கே அதோ ...
சரி சரி
உங்கள் அவசரம் புரிகிறது
ஆனால்
என்னதான் சொல்லுங்கள்
இன்னமும்
இது
என் வீடுதான்.


-வெ. அனந்த நாராயணன்.

No comments:

Post a Comment