Wednesday, December 25, 2013

கவிதை இறகு - கார்த்திகை

துர்க்குறிகள் 
அங்கும் இங்கும்
சிதறிய
நாளிதழோடு
மிஞ்சிய
தேனீர்க் கோப்பைகளோடு

எனக்குரிய இடத்தை
மீண்டும்
அழுத்திய வண்ணம்

மூலையில் ஒதுக்கிய
குப்பைகளோடு
பாதி வெட்டிய
காய்கறிகளோடு

என்னை
மெல்ல மெல்ல
விழுங்கும் வீடு

இறுதியில்
நீ கேட்பாய்
என் பயணம் பற்றி

உனக்குப்
புரிந்த மொழியில்
உனக்கேயுரிய
அச்சுத்தலோடு

எனக்கே உரித்தான
மென்மையோடு
பதிலளிக்க நான்
நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பேன்

விளக்கமுடியாத
புதிர்களோடு
உனக்கு விளங்காத
என் வெளிகளோடு
நான்
என்னுள்
நிரம்பிக் கிடக்கின்றன
ரகசியங்களோடு
துர்க்குறிகள்

விளக்குடன் விளையாடும்
குழந்தையின் குதூகலம்
உனக்குள்

உனக்குப் புலப்படாமல்
போர்களை நிகழ்த்தியபடி
என் மௌனம்

-கி.கலைமகள்.

No comments:

Post a Comment