Wednesday, December 25, 2013

கவிதை இறகு- மார்கழி


உறைப்பு

செம்மிளகாய்ச் சரங்கள்
காய்கின்ற முற்றத்தில்
அலகைக் கொத்தி
காரக் கெக்கெரிப்பில்
கிறுகிறுத்துச் சுற்றும் 
செவலைக் கோழி

வாடிப்போன பூவின்
மகரந்தச் சூலில்
உறைப்புச் சுவை கண்டு
சுழித்துப் பறக்கும்
வண்ணத்துப் பூச்சி

அடுப்பிலே
குழலூதிக் குழலூதிக் 
காந்திச் சிவந்து
கண்ணிமைகளும் தீயுமெனத்
தவிப்பாள் அம்மா

துரத்திய தேன்குளவி
புருவப்பட்டையில் கொட்டி 
புடைக்க வைக்காதவரை
தேன்குளவியில் காரமிருப்பது
தெரியாது எனக்கு

கேப்பக் கூழ்
கரைத்து விட்டால்
உப்பு வத்தல் இல்லாமல்
ஒத்துழைக்க மறுக்கும்
நாவின் அரும்புகள்

பழைய சோற்றுக்கும்
பச்சை மிளகாய்க்கும்
இருப்பதுபோல்
பண்டப் பொருத்தம்
வராது வேறெதற்கும்

விதவிதமாய் எத்தனையோ
ருசிபேதம் இருந்தாலும்
உறைப்புக்கு ஒரே பழம்
இனிப்புக்கு மட்டமேனோ
பழங்கள் நூறு

விட கேட்டுப்போனால்
சொல்லவில்லை
வெட்டரிவாள் ஏந்திய
சுடலைமாடன்

அவன் பாவம்
எவ்வளவு காரந்தான்
சாப்பிட்டானோ
நாக்கத் தொங்கப்போட்டு
எனக்கேம் தெரியாதென்று
வெறித்திருக்கிறான் வெளிய


- வே.ராமசாமி

No comments:

Post a Comment