Wednesday, December 25, 2013

கவிதை இறகு -ஐப்பசி

வரையறைகளை எழுதுதல்
ஒரு பெண் சொல்லை
எப்படியெல்லாம் புரிந்துகொள்ளலாம்?
நிச்சயமாக கலகலப்பின் முத்துக்களாக அல்ல.
அதன் சிகப்புக்கூட மாதுளையுடையது அல்ல.
அருங்கிளியின் பாடலாக அல்ல.


கூறியது கூறலில்
அது
புயலின் நாற்சந்தியில் சுழலும் கைகாட்டி.
திசையில் கவனமில்லாத அது
வரைபடத்தின் தடம்கூட அல்ல.
சேருமிடம் அதன் நோக்கமல்ல.


சில நேரங்களில்
அது நிராசைகளின் கொலுசு.
சில நேரமோ அது
உபரியற்ற விழைவுகளின் வேண்டுதல்.
இன்னும் சில நேரமோ
பாதைகளோடு கண்ணாமூச்சியாட
அவாவும் மின்னல்.


விழியில் உறுத்தும் ஒளியின் நறுக்கு.
சடுதியில் பொருளாகாமல்,
பிரமிப்பில் வைரத்தை நினைவூட்டாமல்,
இறைகட்டளைக்கு முன்னோடி ஆகாமல்,
எந்த ஒழுக்கத்தோடும் சேராமல்
அந்தச் சொல்
சுதந்திரத்தோடு நமக்கிருக்கும் இணக்கம்.


அதனோடு நாமிருக்கும் வெகுதூரத்துக்கான துக்கம்.
தந்தைமையை அடுத்துக் கெடுக்கும்
வாக்கியங்களின் சீட்டுக்கட்டில்
ஒரு ஜோக்கர் துருப்பு.


-பெருந்தேவி.

No comments:

Post a Comment