Sunday, February 19, 2012

பிறந்த ஊர்

வருசம்
போனது தெரியாமல்
போய்விட்டது.

பட்டணத்துக்கு வந்து
நாற்பத்தைந்து ஆண்டுகள்
ஆகிவிட்டன.

பிறந்த ஊருக்கு
புறப்பட்டேன்.
ஒரு வனாந்தரத்தில்
என்னை இறக்கிவிட்டது
பஸ்.

ஐந்து கிலோமீட்டர் நடை
வெயில்
முள்
பனைமரங்கள்
ஒத்தையடிப்பாதை.

மணல் சுடுகிறது
உடம்பு வியர்க்கிறது
தாகம்.

ஒரு முள்மரத்து நிழலில்
இளைப்பாறுகிறேன்,
எனக்கு முன்னே
என்னுடைய கிராமம்.

என்னைப் பார்த்து
நாய்கள் குரைக்கின்றன
பன்றிகள் ஓடுகின்றன
கோழிகளும்
சேவல்களும்
பயத்தில் கெக்கரிக்கின்றன.

சிறுவர்கள்
வேம்படியில்
வேப்பங்கொட்டை
சேகரிக்கிறார்கள்.

தெருவெங்கும்
அடுப்புச் சாம்பல்.
உடைந்து நொறுங்கிய
மண்பானை ஓடுகள்.

ஒரு பாட்டி
ஒரு ஓலையை மடித்து
அதில்
தீக்கங்குகள் எடுத்து வருகிறாள்.

ஒரு அண்ணாச்சி
முறுக்குத் தடியில்
அருவாள்
தீட்டிக்கொண்டிருக்கிறார்.

ஒரு பெண்
தன் குழந்தையை
மடியில்
கிடத்தி
சீழ் துடைத்துக்கொண்டிருக்கிறாள்.

தெருவில்
கால் நீட்டி உட்கார்ந்துகொண்டு
குழந்தை தலைக்கு
தண்ணீர் ஊற்றுகிறாள்
ஒரு தாய்.
குழந்தை உடம்பு முழுவதும் புண்
தண்ணீரில்
மஞ்சள் வேப்பிலை.

கருவாடு சுடுகிற வாசனை
காற்றில் மிதக்கிறது.

ஒரு திண்ணையில்
இரண்டு குழந்தைகள்
கஞ்சி குடிக்கிறார்கள்.

தெருக்கோடி
எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து
நிற்கிறேன்.

வீடு இருந்த இடத்தில்
ஒரு குப்பைமேடு
ஒரு பெரிய கருவை மரம்
இரண்டு கழுதைகள்
படுத்துக் கிடக்கின்றன.

தெருவில்
புழுதி
வெயில்


-மு.சுயம்புலிங்கம்.
"தீட்டுக்கறை படிந்த, பூ அழிந்த சேலைகள்"

No comments:

Post a Comment