Tuesday, January 24, 2012

நொண்டிச் சிந்து


ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல
என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல்


பாணனாய்த் திரிகிறபோதெல்லாம்
என் பாதங்களின் அசைவுக்குச்
சுழல்கிறதே உலகம் என்னதாய்.
கிடைத்த கள்ளும் கூழும்
சந்தித்த தோழ தோழியருமாய்
குந்திய மர நிழல்களில் எல்லாம்
சூழுதே சுவர்க்கம்
காதலும் வீரமுமாய்.

வாழ்வு தருணங்களின் விலையல்ல
தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில்
புயலில் அறுந்த பட்டமாகிறேன்.
காலமும் இடமும் மயங்க.

தருணங்களின் சந்தையான உலகிலோ
தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு
இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு
கட்டைவிரல் இல்லை.

எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட
இந்த சென்னைச் சுவர்க்காட்டில்
சுருதி கூடிய வீணையாய்
காத்திருக்கிறேன்
வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக.


-வ.ஐ.ச.ஜெயபாலன் .

No comments:

Post a Comment