கடவுளுக்காக திறந்த வாசலில் சட்டென நுழைகிறது காற்று கடவுளுக்காக விரித்த பாயில் வந்து படுக்கிறது நாய். கடவுளுக்காக பாடும் பாடல் நமது செவிக்கே திரும்புகிறது வேலியேதுமற்ற கடவுளின் தோட்டத்து மண்ணில் என் பாத சுவடு.
தரைதொடத் தாழ்ந்த அழிஞ்சிமரத்தின் நுனி இலைகளைக் கடக்கும் காற்று சொல்லிவிட்டுப் போகிறது நீ அமர்ந்துள்ள பேருந்துப் பயணத்தின் வேகம்
சிறு குருவிகளின் ஊமச்சிக் குரல்களைக் கை நிறைய வாங்கிக்கொண்டு போய் மாஞ்செடிக் கூட்டில் ஊற்றிவிட்டுத் திரும்புகையில் ஆரஞ்சுச் சூரியனுக்கு நடுவில் உந்தி மேலெழும்பும் மூங்கில் குருத்தின் உச்சித் தளிரில் செருகப்பட்டிருக்கிறது உன் பிரிவின் நாட்குறிப்பு
ஒரு திருநங்கையின் காதல் கவிதைபோல என் மரபணுக்களில் இருந்து எழுகிறது ஒரு பாடல்
பாணனாய்த் திரிகிறபோதெல்லாம் என் பாதங்களின் அசைவுக்குச் சுழல்கிறதே உலகம் என்னதாய். கிடைத்த கள்ளும் கூழும் சந்தித்த தோழ தோழியருமாய் குந்திய மர நிழல்களில் எல்லாம் சூழுதே சுவர்க்கம் காதலும் வீரமுமாய்.
வாழ்வு தருணங்களின் விலையல்ல தருணங்கள்தான் என்பதை மறக்கிற பொழுதுகளில் புயலில் அறுந்த பட்டமாகிறேன். காலமும் இடமும் மயங்க.
தருணங்களின் சந்தையான உலகிலோ தங்க வில்லை சுமக்கிறவர்களுக்கே வாழ்வு இங்கு பல மரவில் வித்தைக்காரருக்கு கட்டைவிரல் இல்லை.
எனினும் சிட்டுக் குருவிகளையே தொலைத்துவிட்ட இந்த சென்னைச் சுவர்க்காட்டில் சுருதி கூடிய வீணையாய் காத்திருக்கிறேன் வன்னிக் காட்டுக் குயில்களின் பாடலுக்காக.