Monday, July 25, 2011

தவறான கேள்விகளும் , சரியான பதில்களும்

ரோஜாப் பூவின் தாவரவியல் பெயர்?
(காதலியின் பெயர்)

மழை உருவாவது எங்ஙனம்?
அவள் கூந்தல் காற்றில் பரவும்வரை பொறுத்திருங்கள்.

இந்தியாவில் பாலைவனம் இருக்கிறதா?
அவள் பார்வை
எட்டாத தூரத்தில்
நின்று தேடுங்கள்.

ஒரு நிமிடத்துக்கு இதயம் எத்தனை முறை துடிக்கும்?
அவள் இருக்கையில் 144....
இல்லாதபோது 72...

ஆகஸ்ட் 6, வரலாற்றுக் குறிப்பு என்ன?
என் பிறந்த நாள்...
என் காதல் பிறந்த நாள்...
என் மனதிலும் இரோஷிமாவிலும் குண்டு விழுந்த நாள்.

சிந்து சமவெளி நாகரிகம் பற்றி எழுதுக?
அவள் இதழ் சிந்தும் சிரிப்புக்காக
இரண்டு முறை உடைமாற்றுகிறேன் வெட்கத்தை விட்டு வேறென்ன சொல்ல...

உலகின் ஏழு அதிசயங்கள் என்னென்ன?
முறைக்கத் தெரியாத கண்கள்
வாடாமல்லியாகிவிட்ட ஜாதி மல்லிகை
உதடு தொட்டும் உயிர் பெறாத கைக்குட்டை..
அவளைச் சுமந்து பல்லக்கு ஆகாத சைக்கிள்..
லவ் லெட்டெர் தராத உள்ளூர் இளைஞர்கள்..
மௌனத்துக்கும் அர்த்தம் கண்டுபிடித்த நான்
இதையெல்லாம்... கவிதையென்று தெரியாமலே பதிவு பண்ணுகிற என் டைரி

சல்ஃப்யூரிக் அமிலத்தின் குணங்கள் என்ன?
அவளின் கோபப் பார்வையில் பொங்கும்...
நுரைத்து தணியும்,
பின் அமிர்தமாகும்.

பிளாஸ்மா சவ்வூடுருவலை விளக்குக?
ஆயிரம் கண்கள் விலக்கி,
என் பார்வை மட்டும் உள்வாங்கும் அவள் இதயம்.

நிலவில் பிராணவாயு உண்டா?
சத்தியமாக உண்டு.
அவளே என் ஆக்ஸிஜன்!

-பாலா.

1 comment: