skip to main |
skip to sidebar
சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.
புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.- சிறீ.நான்.மணிகண்டன்.
மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?
-இரா.பூபாலன்.
….இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
…வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறை வைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும் ஒரு ஆலமரம்.
…என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.
அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.
ஒரு சிறுமி கேட்கிறாள்,
‘இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?’
பதில் வருகிறது.
‘அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது’
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
‘பூமியில் வைத்தால்தானே வளர முடியும்’
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
‘பெண்ணே நீ ஆலமரமாவாய்!’
-வத்ஸலா.
அம்மா,
அஞ்சுநிமிஷம் பொறு என்று
அடுத்தொரு முறை சொல்லாதே.
நீ பொறுக்கச் சொல்வது
முந்நூறு செகண்டுகள்
புரிய மாட்டேனென்கிறது உனக்கு
கவர்பால் வரவில்லையா?
கருப்புக்காபி கொடு
குடிக்கிறேன்
தீய்ந்த தோசையோ
உப்புப் போட மறந்துபோன உப்புமாவோ
ஏதோ ஒரு எழவு - தட்டில் வை.
நிதானமாய் சாப்பிட முடியாது
எட்டு மணிக்குப் பசிக்காமலிருக்க
ஐந்தரை மணிக்குத் தின்கிறேன்
இதிலென்ன நிதானம் வேண்டிக் கிடக்கிறது
டிபனைக் கட்டு.
ஐயோ, பித்தளைத் தூக்களவு வேண்டாம்
மூணு பிடியென்றால் பிண்டப் ப்ரதானமென்பாய்
நாலு பிடி வை.
வாட்டர் பாட்டிலைக் கொடு
வக்காளவோளி நாட்டில்
குடிக்கிற தண்ணீரைக் காசு பண்ணுகிறான்
கும்பலான இடமானால்
ஒண்ணுக்குப் போனாலும் காசு கொடுக்கணும்
அடுத்த பஸ்ஸில் போகமுடியாது
மூன்றாவது லேட்டுக்கு
மூதேவி கம்பெனியில்
அரைநாள் சம்பளம் அம்பேல்
ஒப்பித்து மாளவில்லை
அம்மா,
பொறுமையாய்
மெதுவாய்
நிதானமாய் - அப்பா காலத்துடன் போய்விட்டது.
இது என் காலம்
வெள்ளென எழுந்திரு
சீக்கிரம் சமை
வேகமாய் டிபனைக் கட்டு
வரட்டுமா -
பாவம் அம்மா...
- லாவண்யா.
"இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில்"