Saturday, October 14, 2017

2 சைவரும் 1 சைவக்காரியும்


நீங்க சைவமா?
ம்..ம் . . . ஷைவப்பழம் நான்.
 நீங்க?

சைவம் சைவம் சுத்த சைவம்
 -சிக்கன் மட்டும் சாப்பிடுவேன். 

நீங்க எப்பிடி?
ஓமோம் நானும்
மீன் தலை சாப்பிடும்,
ஆட்டுக்குடல், மாட்டிறைச்சி சாப்பிடும்
செம்மறிக் கொழுப்பில வதக்கின நத்தை சாப்பிடும்
சைவக்காரி.

-ஆழியாள் .

கல் திறந்த கணம்


"பெயரழிந்த ஊர்
அரவமற்ற பிரகாரம்
கரையழியா சரவிளக்கு
திரியெரிந்து பிரகாசித்தது இருள்
காலடியோசைக்கு
சடசடத்துப் பறந்தது புறாக்கள்
எச்சம் வழிந்த முலையொன்றில்
எதேச்சையாய் விரல்பட்டுவிட
உறுத்துப் பார்த்தது
கருத்த சிலை
திகைப்புற்றுக் கண் திருப்ப
காதில் விழுந்தது
நூறு நூறு வருடங்கள் கடந்து
உளியின் ஒளி..."


 - க.மோகனரங்கன்.


விட்டு விடுதலையாகி


"குதிரையை லாயத்தில் கட்டு

கடிவாளம், கண்பட்டைகளை அகற்று
சற்றே ஓய்வு கொள்ளட்டும்...

நடந்து செல்

நாற்றிசையும் கூர்நது நோக்கு
மனிதர்களை,
விலங்குகளை,
புழு பூச்சிகளை,
பறவைகளை,
மரங்களை,
உறுமிச் செல்லும் வாகனங்களை
அன்பாய் கவனி...

அண்ணாந்து வான் நோக்கு...

அதிசயங்களில் மெய் மற.
குனிந்து பூமியை தரிசி;
ஏதேனும் பிடிபட்டால்
எடுத்துச் செல்
இல்லையேல்

உண்டுறங்கி ஓய்வு கொள்..."


- சின்ன கபாலி.

தியாகங்கள்

சிறையினிலே பிறந்ததனால் கிருஷ்ணன் என்றால்

சிலுவையிலே இறந்ததனால் யேசு என்றால்
போர்க்களத்து வார்த்தையெல்லாம் கீதையாகும்.
படுகொலைகள் அத்தனையும் யாகம் ஆகும்.
வாழுகிற நாள் முழுதும் சிறையில் வாடி
வேதனையால் உந்தன் உயிர் போனாற் கூட
ஏதுக்காய் எவருக்காய் என்ற கேள்வி
முன்னிற்கும் அவ்வேளை மக்கட்காக
நகமொன்றை இழந்தவனும் உன்னில் மேலாய்
உயர்வாதல் கூடும் அதை உணர்வாய், கேளாய்
சிலுவையிலே ஒரு யேசு சாய்ந்த போது
இரு கள்வர் அருகினிலே அறையப்பட்டார்.

-சி. சிவசேகரம்

"அக்கறையற்ற உனக்கு"


நினைக்காத வேறொன்று 

எல்லாம் சரியாய் அமைந்துவிட்டது இம்முறை.
புதுத்துணி, நளினமாய் செருப்பு, நகபூச்சு,
வேர்க்கடலை, அவித்த சோளமென
நினைத்ததெல்லாம் வாங்கிவிட்டோம்.
பேருந்தில் ஏறி ஆட்டோ பிடித்து
சிற்றுண்டி விடுதியில் உணவு முடித்து
வீடு திரும்பியதும் கவனித்தேன்
வாங்கிய புதுஜோடி செருப்பைக் காணவில்லை.

ஹோட்டலில் தான் தவற‌விட்டிருக்கவேண்டும்.
தொந்தி அழுந்த குனிந்துத் தேடிய முதலாளி
இல்லையேம்மா என்றார்.
தோசை சுடுப‌வ‌ரும், காபி ஆற்றுப‌வ‌ரும்,
பார்ச‌ல் க‌ட்டுப‌வ‌ரும் கூடி பேசிய‌ப‌டியிருந்தார்க‌ள்

கிடைக்க‌வேண்டுமென்று இருந்தால் கிடைக்குமென
நினைத்த‌ப‌டி வந்துவிட்டேன்.
ச‌ம்பாஷ‌ணைக‌ளில் கலந்துக்கொள்ளாம‌ல்
மேஜை துடைத்துக் கொண்டிருந்த‌வ‌ன்
அன்றிர‌வு க‌ன‌வில் வந்தான்.
 


- அனிதா



Sunday, July 26, 2015

கவிதை இறகு -ஆவணி


கவிதை இறகு -ஆவணி

இந்த நாடு என்னுடையதல்ல ஆனால் 
இந்த மண் என்னைப் போன்றது 
இந்த குளம் என்னுடையதல்ல ஆனால் 
இந்த நீர் என்னைப் போன்றது
இந்த எல்லை வரையறைகளை 
 நான் மறுதலிக்கிறேன் ஆனால் 
இந்த காற்று என்னைப் போன்றது 

இக்கடிகாரமும் நாட்காடியும் 
என்னுடையதல்ல 
ஆனால் காலமும்  பொழுதும்
என்னைப்போன்றது 

இந்த வனத்தை நான் உரிமை கோருவதில்லை 
ஆனால் 
என்னைப் போலவே இவ்வனமும் 
அடைகாக்கிறது கருத்தரிக்கிறது 
உயிர்களைப் பதியனிடுகிறது 
என்மீதானதைப்  போலவே 

இந்த மண்ணின் மீது 
நீரின் மீது 
காற்றின் மீது 
காலத்தின் மீது 
வனத்தின் மீது 
நீங்கள் செலுத்துகிற அதிகாரத்தை 
அடக்குமுறையை 
ஒவ்வொரு அணுவிலும் 
நான் எதிர்ப்பேன் 
இது என்மொழி
உங்களது  போராட்டமும் அதுதானென்றால் 
உங்களுக்கும் புரியக்கூடும் அம்மொழி .....!

-செங்கவின்.

அம்மனும் அம்மாவும்



அம்மனும் அம்மாவும்

எங்களுக்கு மட்டும் என் இப்படிஎன்றால் ?
என்றாள் அம்மா.

எல்லாம் கிரகங்களின் சஞ்சாரம்மா
அஞ்சாறு மாசம் போனா சரியாயிடும் போ

வனதுர்க்கை கோயிலுக்கு அந்தியிலே
ஒரு மண்டலம் விளக்கு போடு

பிடிச்ச கஷ்டமெல்லாம் விலகிப்போகும்
என்றார் பூசாரி தாத்தா

குடும்பத்தின் துன்பமெல்லாம்
தொலைந்துடும் அம்மான் நம்பிக்கை

வயல்வெளியின் நடுவில்
ஒரு கோவில் அடையாளம் காட்டப்பட்டது.

அம்மன் ஆக்ரோசமானவளாச்சே
அங்க எதுக்கு?பயமும் அறிவுறுத்தப்பட்டது.

அம்மாவை தொடரும் நான்
என்னை தொடரும் பயம்

இரண்டு மைல் நடையில்
தினம் வரும் அந்தத் திறந்தவெளிக்கோவில்

ஒரு தீப்பெட்டி தீரும் வரை
தொடரும் விளக்கேற்றுதல்
காற்றை பொறுத்து
சில சமயம் அதுவும் தாண்டும்

திரிகள் வேராகும்
எண்ணெய் நீராகும்
விளக்கு சூரியன்
வெளிச்ச விதையாகும்

கறுப்பு நுனி பெற்றெடுத்த
நெருப்புக் குழந்தை
காற்றோடு போராடும்

கோயிலை சுற்றிய இருட்டு
என்னை மிரட்டும்

அங்கும் இங்கும்
அலையும் தீபம்

இப்படித்தான் நம் குடும்பமும்
அல்லாடுகிறது என்று
தீபம் நேராக எரியும்வரை
கைகூப்பி வேண்டுவாள் அம்மா
குடும்பத்துக்காய் போராடும் அம்மா

காற்றோடு போராடும் தீபம்
இதில் யாரை வணங்குவது ?
இன்றும் தொடர்கிறது
அம்மா மீதான பக்தியும் பக்தியும்
அம்மன் மீதான பயமும்?

-பாலா.

Friday, August 1, 2014

கவிதை இறகு -ஆடி


நான் ஒரு
உடும்பு

ஒரு
கொக்கு

ஒரு
ஒன்றுமே இல்லை

-நகுலன்.

கவிதை இறகு - ஆனி

மாயக் கவித்துவம்

மலைப்பிரதேசக் கனவுக் குடிலோன்றின்
வெளியில் கிடக்கும் கட்டில்மீது
அமர்ந்திருக்கும் என்னை நோக்கி
மரத்தடியில் நிற்கும் நீ
ஒரு கவிதை சொல்கிறாய்
ஒவ்வொரு வரி முடிந்த பின்னும்
மரம் பார்த்திருக்கும்
என் அலட்சியத்துக்காக ஆதங்கப்படுகிறாய்.

நானோ
உன் ஒவ்வொரு வரிக்கும்
மரக்கிளையின் ஒரு கொப்பு
அசைந்தாடும் அற்புதத்தை
அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

-சி. மோகன்.

கவிதை இறகு - வைகாசி

உருமாற்றம்

கொக்கின் பெயர் கொக்கு
என்றறிந்த போது
வயது மூன்றோ நாலோ
கொக்கென்றால் வெண்மையென
பின்னால் கற்றேன்.

அழகு என பறத்தல் என
விடுதலையென போக்கின் கதியில்
தெரிந்து கொண்டது.

வேலையோ வெய்யிலோ
வார்த்தையோ வன்முறையோ
உறுத்தும்போது கொக்கு
மிருதுவென உணர்ந்தது.

அவரவர் வழியில் வளர்கிறோம்
கொக்கு அடுத்து என்ன
ஆகும் எனும் மர்மம்
உடன் தொடர.

-எம். யுவன்.

Wednesday, July 30, 2014

கவிதை இறகு - சித்திரை


ப்பமெல்லாம் பழைய சூரியனா உதிக்குது
பழைய மழையா பெய்யிது

பேரு தெரியாத்த பூச்சிகளொக்க
புதுசு புதுசா மொளைக்குது

ஒலகம் போகுது இந்தப் போக்குல

இதுல என்னடான்னா ஏதோ ஒரு நீக்கம்புல போவான்
எழுதிவச்சுட்டு செத்தானாம்

காது இவ்வளவு அகலம் மூக்கு இவ்வளவு பெரிசு
கைகாலு நீளம் கவுட்டைக்க எடையில கெடக்குறது
எல்லாத்தையும்

இப்பம் கொஞ்சம் தலதெறிச்சு போறவனுக வந்து
மலைய விட்டு தாளோட்டு குடிய மாத்துங்குறானுக

பொறம்போக்குல சாய்ப்பு கெட்டுனா
அவுத்துட்டு ஓடுங்குறானுக

படிச்ச புள்ளையளுக்கு சர்க்கார்
உத்தியோகம் கொடுக்கமாட்டங்குறானுக

எங்க குட்டிச்சாத்தானப்போல
உருண்டோடுகிற பழைய மேகமே

நீ விடுகிற இடிகளெல்லாம்
இவனுகளுக்கத் தலையிலபோய் விழாதா.


-என். டி. ராஜ்குமார்.