Friday, January 18, 2013

கவிதை இறகு - "தை"

ஒழுக்கம்

ஒழுக்கம் பற்றிய குறிப்புகளைத்
தொலைத்துவிட விரும்புகிறேன்.
முடிந்தமட்டும் அதன் பிரதிகளை கிழித்தெறிகிறேன்.
நீதிக் கதைகளை
புராணங்களின் கதைவழியே ஊடுருவும்
நல்லொழுக்கத்தை
பாடப் புத்தகங்கள் வழியே
உடலுக்குள் நுழைந்த நீதிநூல்களை
எல்லாவற்றிடமிருந்து விலகிவருகிறேன்.
இன்னும் காதல் வழியாகவும்
அன்பின் வழியாகவும் நுழைந்த
ஒழுக்கவழிகளை அப்புறப்படுத்திவிட்டேன்.
ஒழுக்கம் வெற்றுச் சொல்லாக மாறிக் கொண்டிருக்கிறது.
எல்லாவித ஒழுக்கத்தின் வாசனையைத் 
தாண்டிவருகிறேன்.
ஒழுக்கத்தைக் கலைந்த மனிதனாக
முதலில் தெருவிலிறங்கி நடக்கின்றேன்.
எதிரே ஒரு பெண் வந்து கொண்டிருக்கிறாள்.
அவள் கண்கள் பிரகாசமாயிருக்கிறது.
அவள் துடைத்துவிட்ட நீலவானம் போல
பளிச்சென்றிருக்கிறாள்.
அவளிடம் நீ அழகாயிருக்கிறாயென்று
சொல்ல நினைத்து தோற்கிறேன்.
அந்த வெட்கம் கெட்ட ஒழுக்கத்தின் வாசனை
எனக்குள் எங்கோ மிச்சமிருக்கிறது.

ஒரு குகையில் கடவுளிருக்கிறான்
இன்னொரு குகையில்
தூய்மையான தண்ணீர் இருக்கிறது
தாகமுள்ளவன்
எந்தக் குகையில் நுழைவான்
ஒரு குகையில் புனித நூல்களிருக்கின்றன
இன்னொரு குகையில் உணவு இருக்கிறது
பசித்தவன் எந்தக் குகையை விரும்புவான்
ஒரு குகையில் பிரார்த்தனை நடந்து
கொண்டிருக்கிறது.
இன்னொரு குகையில் தூய்மையான
ஆடை இருக்கிறது
நிர்வாணமாயிருப்பவன்
எந்தக் குகையில் நுழைவான்
ஒரு குகையில் பெண்ணிருக்கிறாள்
இன்னொரு குகையில் ஒரு கரடி இருக்கிறது
காதல் கொண்டவன் யாரை விரும்புவான்
நான் தாகமுள்ளவனாக இருக்கிறேன்
நான் பசித்தவனாக இருக்கிறேன்
நான் நிர்வாணமாக இருக்கிறேன்
நான் காதலோடு இருக்கிறேன்

-கோசின்ரா.

No comments:

Post a Comment