ஸ்டாலின் என்றதும் உங்கள் நினைவு முதலடுக்கில் வந்து நிற்பது யார் ? 1 ..............2 ..............3 ..............4 .............
எண் ஒன்றெனில் நீங்கள் வெகுஜன அரசியலில் ஆர்வமுள்ளவர் இரண்டெனில் நீங்களொரு தீவிர வாசகர் மூன்றெனில் நீங்களொரு கம்யூனிஸ்ட் அல்லது எதிர்ப்பாளர் நான்கெனில் நல்லது நீங்கள் பாக்கியவான் நீங்கள் நிம்மதியானவர் நீங்கள் சுயநலவாதி நீங்கள் வெகுளி நீங்கள் ஞானசூன்யம் எதுவாகவுமிருக்கலாம். -யாழினி முனுசாமி.
ஒரு ரொட்டித்துண்டுக்காக ஒரு டம்ளர் தேனீருக்காக என் குழந்தைப் பருவத்தில் பலரிடம் கையேந்தியிருக்கிறேன். "கொடுத்தவர்களுக்குக் கோடி புண்ணிம் கிடைக்கட்டும்"
சின்னதில் இருந்தே அம்மா தூர தேசம் பயணம் போனதாகப் பாட்டி கதைசொல்லியிருக்கிறாள். இன்னமும் அம்மா திரும்பி வரவில்லை.
எனது தந்தையும் தமையனும் காணமல் போனார்கள். அவர்கள் உயிரோடு இருந்தால் - நான் உயிரோடு இருப்பேனா என்றுதான் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.
இழந்த எனது தேசக் கனவுகளைக் களத்தில் காயப்பட்டவர்களில் வடிந்துகொண்டிருந்த குருதியால் குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். புலனாய்வு என்று கைதுசெய்து விடாதீர்கள்.
இடம் பெயர்ந்த நாட்களில் எனது கூடாரக் குடிசைக்கு அருகில் இருந்தவர்கள் தங்களின் ஆடைகளை மாற்றி அணிய எனக்கு உதவியிருக்கிறார்கள். உள்ளாடைகளை அவர்களிடம் எப்படி நான் கேட்பது?
வெள்ளத்தால் நிலத்தின் ஊறலும் மழையால் பிய்ந்த கூரைக்குள்ளாலான தூறலும் துவானத்தால் கூதலோடான நடுக்கமும் இருக்கவோ எழுந்து நிற்கவோ உறங்கவோ விடவில்லை.
கொண்டுவந்த ஒரே ஒரு முடிச்சுக்குள் எனது பள்ளிக் கால தேர்வு அட்டைகளும் கறையான் அரித்த பாட்டியின் மரணசான்றிதழும். வளர்த்த நாயிற்கு வைத்திய சாலையில் ஊசிபோட்ட பத்திரமுமே மிஞ்சியது.
நாட்கள் கணக்க கடந்ததும் நானும் விடுவிக்கப்பட்டேன் விசாரணைக்கு மத்தியில்தான்.
எனது இருத்தலுக்காக எதுவுமே இருக்கவில்லை... எனது வளவுக்குள் இருந்த வங்கருக்குள் மனித எலும்புகள் கிடந்தன. சுடுகாட்டை சுத்தம் செய்ததான அனுபவம் எனக்கு.
குழந்தையாய் இருக்கையில் ரொட்டித்துண்டுகளுக்காகவும் தேநீருக்காகவுமே பலரிடம் கையேந்தியிருந்தேன் - ஆனால் இப்போது நான் குமரியாக இருக்கையில் எனது கணவனுக்காகவும் குழந்தைகளுக்காகவும் யாரிடம் கையேந்துவது? --நெடுந்தீவு முகிலன்.
ஒழுக்கம் பற்றிய குறிப்புகளைத் தொலைத்துவிட விரும்புகிறேன். முடிந்தமட்டும் அதன் பிரதிகளை கிழித்தெறிகிறேன். நீதிக் கதைகளை புராணங்களின் கதைவழியே ஊடுருவும் நல்லொழுக்கத்தை பாடப் புத்தகங்கள் வழியே உடலுக்குள் நுழைந்த நீதிநூல்களை எல்லாவற்றிடமிருந்து விலகிவருகிறேன். இன்னும் காதல் வழியாகவும் அன்பின் வழியாகவும் நுழைந்த ஒழுக்கவழிகளை அப்புறப்படுத்திவிட்டேன். ஒழுக்கம் வெற்றுச் சொல்லாக மாறிக் கொண்டிருக்கிறது. எல்லாவித ஒழுக்கத்தின் வாசனையைத் தாண்டிவருகிறேன். ஒழுக்கத்தைக் கலைந்த மனிதனாக முதலில் தெருவிலிறங்கி நடக்கின்றேன். எதிரே ஒரு பெண் வந்து கொண்டிருக்கிறாள். அவள் கண்கள் பிரகாசமாயிருக்கிறது. அவள் துடைத்துவிட்ட நீலவானம் போல பளிச்சென்றிருக்கிறாள். அவளிடம் நீ அழகாயிருக்கிறாயென்று சொல்ல நினைத்து தோற்கிறேன். அந்த வெட்கம் கெட்ட ஒழுக்கத்தின் வாசனை எனக்குள் எங்கோ மிச்சமிருக்கிறது.
ஒரு குகையில் கடவுளிருக்கிறான் இன்னொரு குகையில் தூய்மையான தண்ணீர் இருக்கிறது தாகமுள்ளவன் எந்தக் குகையில் நுழைவான் ஒரு குகையில் புனித நூல்களிருக்கின்றன இன்னொரு குகையில் உணவு இருக்கிறது பசித்தவன் எந்தக் குகையை விரும்புவான் ஒரு குகையில் பிரார்த்தனை நடந்து கொண்டிருக்கிறது. இன்னொரு குகையில் தூய்மையான ஆடை இருக்கிறது நிர்வாணமாயிருப்பவன் எந்தக் குகையில் நுழைவான் ஒரு குகையில் பெண்ணிருக்கிறாள் இன்னொரு குகையில் ஒரு கரடி இருக்கிறது காதல் கொண்டவன் யாரை விரும்புவான் நான் தாகமுள்ளவனாக இருக்கிறேன் நான் பசித்தவனாக இருக்கிறேன் நான் நிர்வாணமாக இருக்கிறேன் நான் காதலோடு இருக்கிறேன் -கோசின்ரா.