Tuesday, September 20, 2011

கனவுக்குள் அசையும் உடல் மொழி

மந்தமாக பெய்யும் மழைக்குள்
வெயில் கீற்று
வயலின் ஒலியாக ஊடுருவும்போது
மறுபடியும் நாம்
காதலைச் சொல்லிக் கொள்கிறோம்

முற்றிய வசந்தம்
முழு அழகையும் வெளிப்படுத்தும் மலைத்தொடரில்
இரண்டு பேரருவிகள் பாய்கின்றன

மண் ருசி …
மண் மணம் … பாய்ந்த உடல்
ஒவ்வொரு சந்திப்புகளிலும்
புது நிலமாகி விளைகின்றது

வார்த்தைகள் எதுவுமில்லை …
ஆனால் நீ கதையொன்று சொல் என்கிறாய்
பன்மடங்கு காதலில் குழைகின்ற கண்களிடம்

வானவர்கள் நமக்காக கூடியுள்ளனர்

உடல்மொழியில்
காட்டுப்புறாவின் கூவல் ஒலிக்கின்றது

கனவுகளை காய்த்து நிற்கின்ற
மா … மரம் நீயென்றால்
நான் உன் கனவிற்குள் சிரித்து
குலுங்கிக் கொண்டிருக்கும்
கொன்றைப் பூ மரமா …

-அனார்.

No comments:

Post a Comment