Tuesday, September 20, 2011

வாழ்ந்து முடிந்த கதை

புரிந்து கொள்ள முடியாததின் மீது
உயிர் உறைவதும் கரைவதுமாய்
ஒடுங்கி ஒடுங்கி நீள மறுக்கிறது மனது

மிக மிக இரகசியமான எனது
உணர்வுகளின் மீது
சுவாரசியமான நிறங்கள்
தோன்றுவதும் மறைவதுமாய்
கழிகிறது பொழுது

எப்படி இருக்கிறாய்?
இப்படி ஆரம்பிப்பதில் கூட
சிக்கல்கள் இருக்கிறதெனக்கு…

மகிழ்வதும் துயருறுவதுமாய்
தெருவோரத்திலிருக்கும்
இலைகளற்ற மரங்களை
நினைவு கொள்ளச் செய்கிறது வாழ்வு

மழை பெய்து ஓய்ந்த
ஒரு நடு இரவில்
அவாவித் தழுவி
நிராகரித்து நிமிர்ந்து
எழ முடியாது
புணர்வாய் கிழிந்து
புலர்கிறது காலை

சில வருடங்களுக்கு
முன்பான காலங்களில் நீ…
எந்தப் புள்ளியில் விட்டுப் போனாயோ
வாழ்ந்த அதே புள்ளிலேயே
கொண்டுவந்து விடுகிறது சமூகம்.


-தில்லை.

No comments:

Post a Comment