Monday, March 28, 2011

கைநிறைய கவிதைகளோடு


கிளைகளற்ற நதியொன்றினுக்கான
காத்திருப்புகளென்கிறேன்.
நதியென்பதே பல ஆறுகளின்
சங்கமம்தானென்கிறாய்.
அதனாலென்ன
பல நூற்றாண்டுகளாய்
மணலோடிய பாலை இது
தேவை நதிகள் மட்டுமே.

-அய்யனார்.

கைநிறைய கவிதைகளோடு
உன்னிடம்
வந்து கொண்டிருக்கிறேன்
எண்ணமுடியாத முத்தங்களோடு
நீயும் எதிர்ப்படுகிறாய்
ஒரு முத்தமிடலில்
பல கவிதைகளும்
ஒரு கவிதையில்
பல முத்தங்களும்
கைநழுவிப் போகின்றன.


-சுகிர்தராணி.அலைகளிடமிருந்து பெற்ற
இரைச்சலை
பிள்ளைகள்
கரையெங்கும் இரைத்துக்கொண்டிருக்க,
பிள்ளைகளிடமிருந்து பெற்ற
குதூகலத்தோடு
கொட்டி முழக்குகிறது கடல்

-குவளைக்கண்ணன்.ஒரு பறவையிட்ட
எச்சத்தின்
நிழலில்
அயர்கிறோம் நானும் என் மந்தையும்
அது மரமாகி நிற்கிறபடியால்.


-ராஜசுந்தரராஜன்.
தகப்பன் பிள்ளைகளிடையே
கிரிக்கெட்டும் கம்ப்யூட்டரும்
பேசப்பட்டு,பேசப்பட்டுக்கொண்டேயிருக்க
அடுப்பங்கரையில் அனல் வீசும்
எண்ணையருகே நான்!
எண்ணை அனல் சுடவில்லை
என்னை அகற்றல் சுடுகிறது!


-வர்ஷா.திரும்பிப் பார்க்கும்
ஒவ்வொரு கணங்களையும்
பதிவு செய்து கொள்கிறேன்...
திரும்பாத பொழுதுகளில்
என்ன நடந்திருக்கும் என்று......


-தினேசுவரி.

No comments:

Post a Comment