பரிதாபமாக நடந்து போகிறது ஒரு கழுதை ரத்தமும் சீழும் வடிகிற கால்களை ஊன்றி எல்லோருடைய பாவங்களையும் சுமந்தபடி நான் என் மனைவிக்கும் நீ உன் கணவனுக்கும் நான் என் காதலிக்கும் நீ உன் காதலனுக்கும் நான் உனக்கும் நீ எனக்கும் இழைக்கும் துரோகங்கள் அதன் முதுகில் மூட்டையாக கனத்துச் செல்கின்றன ரட்சிப்பற்ற காலவெளியில் கழுதை மெல்ல நடக்கிறது அதன் பின்னால் நடந்து போகிறான் ஒரு நொண்டி வண்ணான்.
நாற்பது வயதில் நீ நுழையும் போது, உன் ஓப்பனைகள் ஆடைகள் மாறுகின்றன சட்டையை தொளதொளவென்றோ இறுக்கமாகவோ போடுகிறாய் தலைமுடியை நீளமாகவோ குறுகவோ தரிக்கிறாய் உன்னிடமிருந்து பறந்து சென்ற இருபது வயது என்னும் மயில் உன் மகளின் தோள் மீது தோகை விரித்தாடுவதை தொலைவிலிருந்து பார்க்கிறாய் காலியான கிளைகளில் மெல்ல நிரம்புகின்றன, அஸ்தமனங்கள், சூரியோதயங்கள் மற்றும் அன்பின் பதட்டம்.
பெரும் காப்பிய நாடகம் மேடையில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஒளிவெள்ளத்தில் கதாபாத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் கதை வளர வளர பார்வையாளர்கள் கதையின் பகுதிகளில் இறுக்கமாகிறார்கள் கதையின் ரூபங் கண்டு திகைக்கிறார்கள் நேரம் அதிகரிக்க அதிகரிக்க அவர்களே கதா பாத்திரங்களாக உருமாறுகிறார்கள் மேடையில் பின்பக்கத்திலோ கண்ணன் குண்டி சொறிகிறான் சகுனி பீடி குடிக்கிறான் பஞ்ச பாண்டவர்கள் கேலி பேசிச் சிரிக்கிறார்கள் கிரீடங்களை அழுத்தி பிடுங்கி எடுத்து சொறிந்து கொள்கிறார்கள் மேடையின் முன்பக்கம் ஒளியாகவும் பின்பகுதி இருளாகவும் அந்தரத்தில் நிற்கும் மேடை நாடகம் முடிவடைந்ததும் பார்வையாளர்கள் தங்கள் தங்கள் நாடகங்களை எடுத்துச் செல்கிறார்கள் அவர்களுக்குத் தெரியாமல் ஒளியும் இருளும் நிரம்பிய மேடை அவர்களோடு தொடர்ந்து செல்கிறது. -லஷ்மி மணிவண்ணன்.