Wednesday, November 16, 2011

கவிதை இறகு -கார்த்திகை

கூடவே

இயன்ற அளவு சத்தமிடாமல் உருட்டி
அந்த பழைய சைக்கிளை
சிதம்பர நகர் மக்கள் நல சங்க
பேருந்து நிழற்குடையின் ஓரம்
சாய்த்துவைக்கிறார்

சைக்கிளை விடவும் துருப்பிடித்த உடம்புடன்
மருதாணிப் பூ வாசமடிக்கும்
பின் வீட்டை நோக்கி முதுகு திருப்பி
அமர்கிறார் பீடி புகைத்து.
யாரிடமும் மணி கேட்பதேயில்லை
அவர் நேரம் அவருக்கு தெரியும்
மஞ்சள்நிற பொறியியல் கல்லூரி வாகனம்
வந்துபோனதும் அவர்
அப்புறப்படுகிறார் சிலுவையின் ஆணிகளிலிருந்து.
சிறுநீர் கழிக்கிறார் பூவரச மரத்தடியில்.
பார்வை பதிவது சாந்திநகர்
பஸ் வரும் திசையில்

வேர்க்கடலை வண்டியின் காடா விளக்கு
வெளிச்சமாகப் பரவுகிறது
முகத்தில் ஒரு நடுங்கும் சிரிப்பு.
நகலகக் கடையின் இன்னொரு கழிவுத்தாள் என
கசங்கிய முகத்துடன்
கைபேசியபடியே இறங்கும் பெண்ணிடம்
பையை வாங்கிக் கொள்கிறார்.

சைக்கிளை அந்தப் பெண் மிதிக்க
பின்னால் அமர்ந்திருக்கும் அவருடன்
இருட்டுத் தெருவுக்கு வழி சொன்னபடி
கூடவே போகிறது
இருமல் சத்தமும்.

-கல்யாண்ஜி.

1 comment:

  1. இருட்டுத் தெருவுக்கு வழி சொன்னபடி
    கூடவே போகிறது
    இருமல் சத்தமும்

    எங்கோ நெருடுகின்றன இந்த வரிகள்

    ReplyDelete