
இல்லாத இடைவெளி
நிசப்தத்தில் உறைகிறது.
இடத்தில் இருந்தவாறே
உணர்வெழும்பி
வேறு இடம் துளாவுகிறது.
வெற்று இடைவெளியில்
எதுவும் இல்லாதபடியால்
உரிய உருவம் ஒன்றினை
அங்கு நிரப்பிக்கொள்ளுதல்
காற்றுக்கு சாத்தியமானது.
அந்தரங்கம் பேணத் தெரியா
இரவிலிருந்து
பகல் ஒளியைத் தேடிக்கொள்வது
பிரகாசம் நிறைந்த சூரியனுக்கு
சாத்தியம் ஆனதே.
குளிர்ந்த உடலைத் தழுவியபடி
எனக்கே உரிய மழை
என்னையே வந்து சேரும்.
என் பாதங்களைக் கழுவ
என்னைத் தழுவிக்கொள்ள
என்னைப் போர்த்திக்கொள்ள
நான் நடக்கின்ற வீதியெங்கும்
சிதறிக் கிடக்க
மழை
போதுமானது எனக்கு.
- பெண்ணியா.
No comments:
Post a Comment