Friday, May 4, 2012

'இல்லை' குறித்தான உரையாடல்

இல்லை குறித்தான உரையாடல்
தொடர்ந்தபடியே இருக்கிறது
இல்லை என்பதை
இல்லை என்றுதானே சொல்லமுடியும்
உமக்கேன் அத்தனைக் கோபமும் எரிச்சலும்?
காணாத ஒன்றை
எப்படி நான் நம்புவது ?

உணரத்தான் முடியும் என்கிறீர்
கரண்ட் என்கிறீர்
காற்று என்கிறீர்

கரண்ட் விஞ்ஞானம்
காற்று இயற்கை என்றால்
எல்லாம் அதுதான் என்கிறீர்

நீ சொல்வதைத் தீண்டினால்
செத்துப்போவோமா?
குறைந்தபட்சம்
'ஷாக்'காவது அடிக்குமா?

காற்று
குளிர்ச்சியை உணர்த்துகிறது
வெப்பத்தை உணர்த்துகிறது
புழுக்கத்தை உணர்த்துகிறது
'இல்லை' எதை உணர்த்துகிறது?

எல்லாம் மாயை எனில்
அதுவும் மாயைதானே ?
'அது வேறு இது வேறு ' என்கிறீர்

பேரழிவு ஏனென்று கேட்டால்
பாவத்தின் பலன் என்கிறீர்
மடிந்தவரெல்லாம் பாவிகளோ?
பெரும் பாவம் செய்தவர்களெல்லாம்
பெரும் பாதுகாப்போடு வாழ்கிறார்கள் என்றால்
அரசியல் பேசுகிறேன் என்கிறீர்

என்னிடம் பேசாதே!
போ ...
அவனிடம் போ .
குறைந்தபட்சம் அவனை எனக்கு
உணர்த்தவாவது செய்யச் சொல்
அதுவரை நான்
சாத்தானாகவே இருந்துவிட்டுப் போகிறேன் .

- யாழினி முனுசாமி.

ஒரு மிடறு நஞ்சு

கண்ணீரைத் தவிர வேறெதுவுமில்லா
இரவிலிருந்து வெளிப்படும்
வன்மத்தை எரிக்க
ஓராயிரம் காடுகளை
தீயிட வேண்டும்

நினைவுகளில் எரியும் நெருப்பு
நினைவுகளாய் எரியும் நெருப்பு
நினைவுகளை எரிக்கும் நெருப்பு

எந்த நெருப்பும்
நெருப்பைப் போலவே இல்லை
எந்த நினைவும்
நினைவைப் போலவே இல்லை
நெருப்பைவிட அதிகமாய் எரியும்
வேறேதோவொன்று
நினைவைவிட அதிகமாய் கனக்கும்
வேறேதோவொன்று.

-துரோணா.

Thursday, May 3, 2012

எனது இந்தியா- ஜிம் கார்பெட் ; தமிழ் மொழியாக்கம்.

"வாழ்ந்தவர்கள் மனது விட்டு சொல்லும்போதுதான் வாழ்கை புரிகிறது. ஆனால் அப்படி சொல்லுவதென்பது அபூர்வமாகதான் நிகழ்கிறது "
எப்போதோ படித்த பாலகுமாரனின் வரிகள் . இப்போது இந்த "எனது இந்தியா" புத்தகத்தை வாசிக்கும்போது தோன்றுகிறது.

"ஜிம் கார்பெட்"
நம்ப முடியவில்லை இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் ! இந்த அனுபவங்களின் மூலம் அவரின் வாழ்கை ஒரு உண்மையான, அபூர்வமான, மனிதனின் வாழ்க்கையாக மற்றவர்களுக்கு அர்த்தமாகிறது . அவர் நேசித்த காட்டுயிர்கள், எளிமையான மனிதர்கள் என்று அவர் வாழ்ந்த இடத்திலயே அவர் பெயரால் வன உயிரியில் பூங்கா அமைத்திருப்பது அவருக்கு கொடுக்கும் உண்மையான மரியாதை.

அவர் எழுதிய ஆங்கில நூலின் தமிழாக்கம் யுவன் சந்திரசேகர் முயற்சியால் நமக்கு படிக்க கிடைக்கிறது. அருமையான மொழிபெயர்ப்பு மூலம் யுவன் சந்திரசேகர் அதை படிக்கும் அனுபவத்தை இனிமையாக்குகிறார். நண்பர்களுக்கு, குழந்தைகளுக்கு மற்றும் மனிதத்தை விரும்பும் அனைவருக்குமான சிறந்த அன்பளிப்பு இந்த "எனது இந்தியா".


"இரண்டு வயது புத்தாலியும், மூன்று வயதுப் புன்வாவும் காணாமல் போனது வெளிக்கிழமை மத்தியானத்தில். மாடு மேய்ப்பவன் அவர்களை கண்டெடுத்தது திங்கட்கிழமை சாயங்காலம் சுமார் ஐந்து மணிக்கு - கிட்டத்தட்ட எழுபத்தேழு மணி நேரம் கழித்து. எனக்குத் தெரிந்தவரை அந்தக் காட்டில் இருந்த காட்டு விலங்குகள் பற்றிய விபரத்தை முன்னரே கொடுத்திருக்கிறேன். அந்தக் காட்டில்தான் எழுபத்தேழு மணி நேரத்தை குழந்தைகள் கழித்திருக்கிறார்கள். மேற்சொன்ன விலங்குகளும் பறவைகளும் இந்தக் குழந்தைகளை பார்க்கவோ,கேட்கவோ இல்லை என்று அனுமானிப்பதற்கு எந்த ஒரு நியாயமுமில்லை.இருந்தாலும் மாடுமேயப்பவன் புத்தாலியையும் புன்வாவையும் அவர்களது பெற்றோரின் கரங்களில் ஒப்படைத்தபோது, குழந்தைகளின் மேல் பற்தடமோ,நகக்குறியோ ஒன்று கூட இல்லை."

"ஒரு மாதமே நிரம்பிய ஆட்டுக்குட்டியை நோக்கிப் பெண்புலியொன்று பதுங்கிப் பதுங்கிப் வந்ததை ஒரு முறை பார்த்தேன். திறந்த வெளியாய் இருந்தது அந்த இடம்.புலி சற்றுத் தொலைவில் வரும்போதே ஆட்டுக்குட்டி அதைப் பார்த்துவிட்டது. கத்தி குழறத் தொடங்கியது. உடனே பதுங்குவதை விட்டு நேராக ஆட்டுக் குட்டியிடம் சென்றது புலி. சில கஜ தூரத்துக்குள் புலி வந்த மாத்திரத்தில், ஆட்டுக்குட்டி அதை எதிர் கொண்டு சென்றது.அருகில் சென்றதும் புலியை முகர்ந்துபார்பதற்காகத் தன் கழுத்தை நீட்டித் தலையை உயர்த்தியது. மூச்சுத் திணரவைத்த சில நொடிகளுக்கு வனத்தின் அரசியும், பிறந்து ஒரு மாதமே ஆன ஆட்டுக்குட்டியும் முகத்தோடு முகம் உரச நின்றனர். பிறகு அரசி திரும்பிவிட்டாள். வந்த வழியே திரும்பிச் சென்றாள்."


"காட்டு மரங்களை வெட்டும் பணியினால், காட்டுயிர்களின் நிம்மதியான வாழ்கை ஒழுங்கு குலைந்தது .நிர்க்கதியான, அனாதையாகிய பிராணிகளுக்கு என்னுடைய சிறிய கூடாரத்தில் அடைக்கலம் தர வேண்டி வந்தது. இரண்டு கவுதாரிகள்-கருப்பு ஒன்று,சாம்பல் நிறம் ஒன்று- நான்கு பெண் மயில் குஞ்சுகள்,இரண்டு முயல் குட்டிகள், குச்சிகால்கள் கொண்டு நிற்கப் பழகும் கலைமான் குட்டிகள் இரண்டு என்று என் கூடாரத்தின் ஜனத்தொகை அதிகமாகிவிட்ட சமயத்தில்,ரெக்ஸ் என்னும் மலைப்பாம்பு என் கூடாரத்தில் வந்து குடியேறியது.

இரவு கவிந்து ஒரு மணிநேரம் கழித்துக் கூடாரத்துக்கு வந்தேன். நான்கு கால் பிராணிகளுக்கு பாலூட்டிக் கொண்டிருந்தபோது, கூடாரத்தின் மூலையில் ஏதொவோன்றின்மேல் லாந்தர் ஒளி பட்டுப் பளபளத்தது.அருகில் சென்று பார்த்த போது,மான்குட்டியின் படுக்கையாக இருந்த வைக்கோல் மீது ரெக்ஸ் சுருண்டு கிடந்தது.கூடாரத்தின் இளம் உறுப்பினர்களை எண்ணிப் பார்த்தேன்.எண்ணிக்கை சரியாக இருந்தது.எனவே,ரெக்ஸ்சை அது தேர்ந்துகொண்ட மூலையில் இருக்குமாறு விட்டுவிட்டேன். தினந்தோறும், வெயில் காய்வதற்குக் கூடாரத்தைவிட்டு வெளியேறும்.சூரியன் மறைந்ததும் தன்னுடைய மூலைக்கு திரும்பிவிடும்.இவ்வாறு கழிந்த இரண்டு மாதங்களில்,கூடாரத்தில் தன்னுடன் வசித்த இளம் குருதுக்களுக்கு அது ஒரு தீங்கும் இழைத்ததில்லை."


இந்தியாவின் நைனிடால் பகுதியில் பிறந்த ஜிம் கார்பெட் ,42வது வயதில் தான் ஒருமுறை பிரிட்டன் சென்றுள்ளார்.தன் வாழ்கை முழுவதையும் இன்றைய உத்ராஞ்சல் என்று அழைக்கப்படும் பகுதியில் கழித்த ஜிம் கார்பெட் ,இந்தியா விடுதலை பெற்ற பிறகு பிரிட்டனின் இன்னொரு காலனி நாடான கென்யாவிற்கு குடியேறி அங்கயே இறந்தார்.

முன்னுரையின் ஒருபகுதியில் " இவர்கள் நிஜமாகவே ஏழைகள்,இந்தியாவின் பஞ்சைப்பராரிகள் என்று அழைக்கப்படுபவர்கள்.இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்திருக்கிறேன்,இவர்களை நேசிக்கிறேன். இந்த புத்தகத்தில் இவர்களை பற்றித்தான் பேசப்போகிறேன்.இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்" என்று அவர் யார் மத்தியில் வாழ்ந்தாரோ அவர்களுக்கு சர்ப்பணம் செய்திருக்கிறார்.

"எனது இந்தியா" மனிதத்தை விரும்பும், சக மனிதனை நேசிக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய புத்தகம்.


"எனது இந்தியா"
ஜிம் கார்பெட்- தமிழாக்கம் "யுவன் சந்திரசேகர்".
காலச்சுவடு பதிப்பகம்.
#669 கே.பி.சாலை.
நாகர்கோயில்-629 001.
தொலைப்பேசி-91-4652-278525.
விலை-125/-
பக்கங்கள்-229.

Wednesday, May 2, 2012

பயணம்

சருகென இறங்கும் பறவை
வந்த தூரம் வாலுக்குப் பின்னே
வியாபித்திருக்கிறது
எல்லை சிறு புள்ளியாய்
எதிர்பார்ப்புகளோடு துவங்கிற
பயணம் வெறுமனே நிகழ்கிறது

பறக்கும் வரை அது பறவை
அழியும் வரை அது காடு
நிலைக்கும் வரை அது மலை
இருக்கும் வரை யாம்.


-பொன். இளவேனில்.

இந்த விளையாட்டை...

பிறிதொரு மார்க்கத்தில்
உன்னை
பின்தொடர யத்தனிக்கும்
வேளையில்
நீயாகவே அழைத்துப் பேசி
தொடரச் செய்கிறாய்
இந்த விளையாட்டை
இன்னுமோர் முறையும்.

-செல்வராஜ் ஜெகதீசன்.

Friday, April 20, 2012

அரங்கேறும் சொற்கள்

கன்று தான் சிங்கம் என்பான்
கரடிதான் கலைமான் என்பான்
பன்றிதான் யானை என்பான்
பருந்து தான் மஞ்ஞ என்பான்
அன்றிலே காக்கை என்பான்
ஆமென்பார் சபையிலுள் ளோர்;
வென்றவன் சொல்வ தெல்லாம்
வேதமல் லாமல் என்ன?

பள்ளமே இமயம் என்பான்
பாட்டியே குமரி என்பான்
வெள்ளியே ஈயம் என்பான் ;
வெந்தயம் இனிக்கும் என்பான்;
கள்ளியே முல்லை என்பான்
கண்ணாலே கண்டேன் என்பான்;
உள்ளவன் சொல்வ தெல்லாம்
உண்மையல் லாமல் என்ன?

நதிபோகும் திசையை மாற்றி
நடக்கட்டும் வடக்கே என்பான்
மதியம் தன்வானை விட்டு
மண்ணிலே வீழட்டும் என்பான்
இதுமுதல் கடல்நீ ரெல்லாம்
இனிக்கட்டும் தேன் போல் என்பான்
அதிகாரி போடும் ஆணைக்கு
அடங்காமல் வேறென் செய்ய?

சொல்லுவார் வார்த்தை யாவும்
தொல்புவி ஏற்பதில்லை
செல்வர்கள் வெற்றி பெற்றோர்
தினஏடு கையில் உள்ளோர்
வல்லவர் பதவி கொண்டோர்
வார்த்தையே அரங்கம் ஏறும்
நல்லவர் சொற்கள் ஏறும்
நாளொன்று வருமா தாயே.

--கவியரசு கண்ணதாசன்.

ஒற்றை ரோஜா

ஒரு ரோஜாப்பூவை
சூடிக்கொண்டிருந்த பெண்
என்ன நினைக்கிறாள்
சீர்காழி பஸ்ஸில் ஏறி
சிதம்பரம் போகிறாளா?
வழியில் எங்காவது
இறங்கி விடுவாளா?

அலுவலகம் போகிறாளா?
வகுப்பிற்குச் செல்கிறாளா?
வீட்டிற்குத்தான் போகிறாளா?

ஒற்றை ரோஜா
புத்தம்புது மலராய் மினுமினுக்க
அவள் கன்னத்திலும்
சிவப்பை அள்ளித் தெளித்திருந்ததா?

-அழகியசிங்கர்.