Sunday, July 19, 2009

வாழவே எழுந்தோம்!

எங்கள் புருவங்கள் தாழ்ந்துள்ளன.
எங்கள் இமைகள் கவிந்துள்ளன.
எங்கள் உதடுகள் அண்டியுள்ளன.
எங்கள் பற்களும் கண்டிப்போய் உள்ளன.
நாங்கள் குனிந்தே நடந்து செல்கிறோம்.

எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக.
எங்களை நீங்கள் வண்டியிற் பூட்டுக.
எங்கள் முதுகில் கசையால் அடிக்குக,
எங்கள் முதுகுத்தோல் பிய்ந்தூந்து போகட்டும்.

தாழ்ந்த புருவங்கள் ஓர்நாள் நிமிரும்.
கவிந்த இமைகள் ஒருநாள் உயரும்.
இறுகிய உதடுகள் ஒருநாள் துடிதுடிக்கும்.
கண்டிய பற்கள் ஒருநாள் நறநறக்கும்
. அதுவரை நீங்கள் எங்களை ஆள்க.
அதுவரை உங்கள் வல்லபம் ஓங்குக.

-சண்முகம் சிவலிங்கம்.

Saturday, July 18, 2009

எந்நாளும் தமிழ்ப் பெண் அழ விதியோ?

விதியே விதியே தமிழச் சாதியை
என் செய நினைத்தாய் எனக்குரையாயோ ?
- பாரதியார்


வங்கக் கடல் அலையே
மாரடித்துக் கதறினையோ.
இமய முகட்டிலும் போய்
இடித்துக் கண் வடித்தாயோ.
நாதியற்ற தமிழகத்து மீனவர்கள்
சேதுக் கடலில் சிந்திய செங்குருதி
கங்கை வடி நிலத்தில்
கொட்டி அரற்றினையோ.
இவர்களும் இந்தியரே
என்று வடபுலத்து
மன்னர் உணரவென
வாய் விட்டு அழுதாயோ.

இந்தியன் தமிழன்
என்பதனால் மீனவர் நீர்
சிங்களத்துப் படைகளுக்குச்
சிறு புழுவாய்ப் போனீரோ.
அதனால் கேட்பார் இலி நாய்போல
தினந்தோறும் உம்மைச்
சிங்களவன் சுட்டுச் சேதுக் கடல் எறிவான்.
முன்னர் ஒரு தடவை
இலங்கைக் கடற் படையை
கட்டி இழுத்து வந்தார்
இராமேஸ்வரக் கரையில் சிறைவைத்தார்.
அந்நாளில்
உங்கள் மேல் கைவைக்க அவர்கள்
இரண்டுதரம் யோசித்தார்.
அன்று மீனவரே நீங்கள்
இந்தியர் தமிழரென
தலை நிமிர்ந்தீர் கடல்களிலே.

ஒன்றல்ல இரண்டல்ல
306 பிணம் வீழ்ந்தும் உங்களுக்காய்
ஏனென்று கேட்க
தலைவனென இன்று
இலையோ தமிழகத்தில் .
உங்களைக் காக்க
டெல்கியிலும் எவரிலையோ.
சென்னைச் சிற்றரசருக்குத்
தமிழன் யார்
டெல்கிப் பேரரசருக்கு
இந்தியன் யார்
பெரும் வாக்கு வங்கி உள்ள
சாதிகளைச் சேர்ந்தவர்தான்.
தனிக் கட்சி கட்டவல்ல
சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.
உங்களுக்கோ வாக்கு வங்கி
ஒன்றும் பெரிதில்லை.
அதனால் கொன்றாலும் ஏனென்று
குரல் கொடுக்க யாருமில்லை.
தமிழகமே உனக்குத்
தன்னாட்சி எதற்காக
இந்தியாவே உனக்குப்
படை அணிகள் எதற்காக
சேதுக் கடலை
மேலும் தமிழகத்து மீனவரின்
இடுகாடாய் ஆக்கவென்றா
சிங்களத்துக் கடற்படைக்கு
டெல்கியே நீ போய்
போர்க் கப்பல் பரிசு தந்தாய்.
தமிழகத்து மாகவிகாள்
தலைமைக் கலைஞர்காள்
படை வந்து அன்னியர் உம்
பல் நூறு சகோதரரை
கொல்கின்ற போதும்
குரல் கொடுக்க மாட்டாரோ.
கல் நெஞ்சோ உங்கள்
கடற் கரையில் எந்நாளும்
தாலி அறுந்து
தமிழ்ப் பெண் அழ விதியோ?
-வ. ஐ. ச. ஜெயபாலன்

படித்ததில் பிடித்தது 1

ஒரு வலை தளத்தில் படித்த கவிதை
கவிஞர் ஜெய.பாஸ்கரன் எழுதியது

இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்
.
பலமுறை"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.
அடிக்கடி"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

Monday, May 4, 2009

சமாதானம்

சமாதானம்
முதல்முதலாக
ஓநாய்கள் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்தபோது
சமாதான விரும்பிகள் ஒன்றுகூடி
ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஓநாய்கள் மீண்டும் ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்த
போது
சமாதான விரும்பிகள்
நீண்டநேரம் தம்முள் விவாதித்து
மீண்டும் ஏகமனதாக
ஓநாய்களைக் கண்டித்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்
ஓநாய்களும்
விடாது ஆட்டுக்குட்டிகளைக் கவர்ந்து வந்தன
சமாதான விரும்பிகளும்
தளராது
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்
ஆடுகள் ஒன்றுதிரண்டு ஓநாய்களை எதிர்த்தபோது
சமாதான விரும்பிகள்
மீண்டுங் கூடிப்
போரை எதிர்த்துத்
தீர்மானம் நிறைவேற்றினார்கள்

ஆடுகள் தமது கொம்புகளைப் பிரயோகித்ததில்
ஓநாய் ஒன்று கொல்லப்பட்ட போது
கொம்புகளாற் தாக்குவது
யுத்த விதிகட்கு முரணானது எனவும்
பற்களையும் நகங்களையும் விட வேறெதையும்
பாவிப்பது
அநாகரிகமானது எனவும்
சமாதான விரும்பிகள்
புதிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்
ஆடுகட்குப் பற்களாற் போர் புரியத் தெரியாததாலும்
தமது குளம்புகள் மொட்டையானவை என்பதாலும்
கொம்புகளாலேயே போரிட்டன
சமாதான விரும்பிகட்குப்
போரை நிறுத்த வழிதெரியாததாலும்
தீர்மானங்களை நிறைவேற்றுவதை விட
வேறேதும் இயலாததாலும்
ஆடுகளின் அநாகரிகமான போர்முறையைத்
தொடர்ந்துங் கண்டித்துத்
தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்

ஓநாய்கள்
சமாதானத்துக்கு உடன்படாவிட்டாலும்
ஆடுகள் அநாகரிகமானவை என்ற் கூறி
அவற்றை அண்டுவதை நிறுத்தின
சமாதான விரும்பிகள்
ஆடுகளின் அநாகரிகமான நடத்தையை
இன்னமும் மன்னிக்க மறுக்கிறார்கள்
ஆயினும்
ஆடுகள் பாதுகாப்பாக உள்ளன.

-சி. சிவசேகரம்.
"போரின் முகங்கள்".

Monday, April 6, 2009

வாடிவாசல் -குறு நாவல்.

இது விமர்சனம் அல்ல.தமிழின் தலைசிறந்த எழுத்தாளரின் நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிய பதிவு.இந்த நூலை படிக்கும் முன்பு வரை பெரிய அபிப்ராயங்கள் எனக்கு இல்லை .ஆனால் படித்து முடித்தவுடன் உண்மையிலயே பிரமிப்பு.கண் முன் விரியும் காட்சிகளாக ஒரு நாவல் இருக்க முடியுமா?முடியும் என்பதற்கு இந்த "வாடி வாசல் " சாட்சி.

இரண்டு மாடுபிடி வீரர்கள் ஆன வாலிபர்கள் ,சில ஜலிக்கட்டு காளைகள்,ஒரு கிழவன் ,ஜமிந்தார் இவர்கள் மட்டுமே கதையில்.ஆனால் கதைகளத்தை விவரிப்பதிலும் ,கதை நகர்வதிலும் "வாடி வாசல் " க்கு நிகர் இல்லை.எனக்கு பிடித்த நூல்களில் முதலாவதாக வாடி வாசல் பற்றி எழுதுவதில்எனக்கு பெருமை.தமிழரின் வீர விளையடான ஜல்லிக்கட்டு சர்ச்சைகளுக்கு தற்போது உள்ளான போதிலும்,கடந்த காலங்களில் கடைபிடித்த விளையாட்டு தர்மங்கள் மற்றும் விளையாட்டின் நுணுக்கங்கள் ஆகியவற்றை விவரிக்கும் போது நாம் ஒரு ஜல்லிகட்டின் வாடி வாசல் முன்பு நிற்பது போல உணர்கிறோம் .

தன் தந்தையின் உயிரை ஜல்லிகட்டில் பறித்த ஒரு காளையை அடக்கும் மகனின் கதை என்று ஒரு வரியில் சொல்லிவிடலாம் ஆனால் கதை புதிது ,களம் புதிது முக்கியமாக சொல்லப்பட்ட விதம் புதிது.தமிழர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களில் வாடி வாசல் முக்கியமானது.

இதிலிருந்து சில பகுதிகள்....

கிழக்கு சீமையில் பிரசித்தி பெற்ற மாடு அணைகிறவன் மகன் அந்தப் பையன் -பேச்சுக்கு பையன் என்றாலும் -அந்த வாலிபன் என்ற செய்தி அந்த ஷணமே வாய்க்கு வாய் மாறி வாடிவாசல் முன் சூழ்ந்து நின்ற அதனை நூற்றுக்கணக்கானவர்களுக்கும் பரவி எட்டிவிட்டது.தொழிலில் ஈடுபட்ட அத்தனை பேரும் அவனையே ஆராய்ந்தார்கள் .கண் உறுத்து பார்த்து அவனவன் யூகத்திற்கு அகபட்டபடி பேசிகொண்டார்கள் .

" மாடு பிடிகத்தான் வந்திருப்பான் பய.அதுக்கு சம்சயம் வேறேயா?"
" கிளகத்தி ஆளு,துடியாதான் இருப்பான் "
" சல்லிகட்டு ரோசமாதான் இருக்கும் "

" உருமாளுக அத்தனையையும் தட்டிகிட்டு போயிர போறான் கிழக்கத்தியான்" "நம்ம பக்கதானுக அசந்தாப் போச்சு "
"ஜமிந்தார் மாட்டை கூட ஒரு கை ..."
"ஹும் ! ஜமிந்தார் மாட்டை புடிக்க இவன்தானா ஆளு? ஆண்டுப் பய !"
"கொம்புலேர்ந்து குதிசுப்புடானோ ? கிளகக்கதியானா ? வெறும் பேச்சுப் பேசிக்கிட்டு !"

" பார்த்தியா பிச்சி, வாடிபுரம் காளைக்கு வந்திருக்கிற மவுசை ?" என்றான்மருதன் கிண்டலாக. "பார்த்துடலாம் ," என்று பிச்சி ஒரே வார்த்தைதான் சொன்னான் ,அதுவும் மெதுவாக .கிழவன் அதை உன்னிப்பாக கேட்டுவிட்டான் .அந்த வார்த்தையை பிச்சி அழுத்தின விதம் கிழவனை ஒரு குலுக்கு குலுக்கி விட்டது .
" என்ன தம்பி விளையாட்டுக்கு பேசுறியா, இல்லே ..."என்று தடுமாறக் கலவரத்துடன் பார்த்துக் கிழவன் கேட்டான்.பிச்சியின் வார்த்தைக்கு ஒரே அர்த்தம்தான் உண்டு .அந்த அர்த்தத்தில்தான் அவன் சொல்லியிருக்கிறான் என்பதை கேட்டும் அவனால் நம்பமுடியவில்லை "


கிழவனின் கலவர முகத்தை நிலைத்து பார்த்து லேசாக சிரித்து பிச்சி சொன்னான் ," ஏன்,தாத்தா ,சும்மா போகிற மாட்டுமேல மனுஷன் விழறதே ஒரு விளையாட்டுதானே , இல்லிங்களா? சொல்லுங்க ,ஏன் பாக்கிறவங்களுக்கு கூட அது விளையாடதானே இருக்கு. அதுக்குன்னு பிறந்துபோட்டு...... "

அட விடுங்கப்பா கீழே," என்று பிச்சி வற்புறுத்தி உற்சாக தோள்களிலிருந்து கிழிறங்கி நின்றான்.மறுபடியும் ஜமிந்தார் முகத்தை பார்த்து கும்பிட்டான்." டேய் ,வாடிபுரம் காளையை புடிச்சி பாக்றியா?" என்று திடுதிபென ஜமிந்தார் அவனை கேட்டுவிட்டு அவன் முகபாவத்தை ஆராய்ந்தார்.

அந்த சில வினாடிகளுக்கு இருவரும் ஒருவரைஒருவர் நோட்டம் பார்த்து கொண்டார்கள் .அந்த வாலிபனின் வேலையையும் கையாளும் புதுபுது உத்திகளையும் சுதாரிப்பையும் கையுறுதியையும் அந்த இரண்டு காளைகள் விசயத்தில் அவர் பார்த்துவிட்ட பிறகு அவருக்கு திடீர் சந்தேகம் பிறந்துவிட்டது -வாடிபுரம் காளையையும் அவன் பார்த்து விடுவனோ என்று .இதுவரை இருந்த இரட்டை நிச்சயம் அவருக்கு இப்பொது இல்லை,முதல் முதலாக அவர் வாழ்கையில் ,வாடிவாசல் முன்பு.வீசி வந்த கேள்வியை கேட்டு பிச்சியும் சற்று திடுக்கிட்டு விட்டான்.ஜமிந்தார் கேள்விக்கு அர்த்தம் ,அதற்கு பின் உள்ள அவர் நினைப்பு ,இதெல்லாம் நினைத்து பார்த்தான்.அவர் முகத்திலிருந்து நிச்சயமாக மதிப்பிட முடியவில்லை .அனால் ஒன்று மட்டும் நிழல் வீசியது .அவரது சந்தேகத்தை போக்கும்படியாக இரண்டிலொரு பதிலை எதிர்பார்த்தமாதிரி தோன்றியது.

"உறுதியாக சொல்லமுடியாதுங்க " என்று ஜமிந்தார் கண்களை சந்திக்காமலே தலை குனிந்து பிச்சி இழுத்தான் ." நோக்கம் பர்த்துகிடனுங்க."அந்த வார்த்தை முனக்கமாக வந்தது.ஆனால் ஜமிந்தார் காதுக்கு தெளிவாக கேட்டது .

"சரி போ !"என்று ஜமிந்தார் வெட்டி சொன்னார் ." மாடுகளை புடி!" பிச்சியின் வார்த்தைகளில் உள்ள அர்த்தம் அவருக்கு தெளிவாகிவிட்டது .


"ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் . அது விளையாட்டும் கூட.புய வலு ,தொழில்நுட்பம் எல்லாம் அதற்கு வேண்டும் .தான் போராடுவது மனிதனுடன் அல்ல,ரோசமூடப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை நாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன் அந்த இடத்தில மரணம்தான் மனிதனுக்கு காத்து கொண்டிருக்கும்.காளைக்கு தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது .அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை."என்று வாடிவாசல் -கு முன்னுரை எழுதி இருக்கிறார் சி.சு.செல்லப்பா. உண்மைதான் .

படித்து விட்ட பிறகும் நம் மனம் வாடிவாசலில் நிற்பது உண்மை.

வாடிவாசல்
சி.சு.செல்லப்பா
காலச்சுவடு பதிப்பகம் .
விலை-நாற்பது .

Sunday, April 5, 2009

கேள்வி--எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது ?


நிலவு கிழிந்து தூங்குகிறது
வேலியில்
நள் யாமம்;
உதிர்ந்து கொண்டிருக்கும் இலைகளின் மேல்
நடந்து திரிகின்றனர்
உயிர் திருகும் எமதூதர்

அடிவளவின் கிணற்றுக்குள்
காலம் காலமாய் புதையுண்டு கிடந்த
பூதங்களும்
இப்பொது சிலிர்த்துக்கொண்டு
கிளம்புகின்றன.

துயிலில் தொலையாது
துயரில் கரையும் இன்றைய இரவில்
இதயத்தை பிடுங்கி
மேசைமீது வைத்துவிடுகிறேன்
குருதி சொட்டச் சொட்டச்
பெருகும் அதன் ஒலிக் குமுறலில்
கொஞ்ச நேரம் நடுங்குகிறது மேசை .

வெளியுலகின் காற்று வாங்கிக்
குளிர்ந்து போய்விடுகிறது இதயம்

அப்போது
விட்ட இடத்திலிருந்து என்னுடைய
கவிதையை தொடங்குகிறேன்

இன்றையை போல
என்றைக்கும் ஒரு கவிதைக்காக
நான் உழன்றது கிடையாது
வெளியில்
நெடுநாளாய் அலைந்தது இக் கவிதை

அதனுடைய ஆரம்பமே
ஒரு கேள்விதான்
கொல்லப்பட்ட நண்பர்களை பற்றி
காணமல் போன நண்பர்களை பற்றிய
ஒரு பெரிய கேள்வி அது

கேள்வியில் பிறபெடுத்த
இந்த கவிதை
திடிரென்று என்னைவிட்டு பிரிந்துசெல்கிறது
நெயயப்படாத வார்த்தைகளுடன்
அறிவால் நெறிப்படுத்த படாத
மிகைஉணர்ச்சியும் சேர்ந்து
பிரவாகம் எடுக்க
இந்த கவிதை பிரிந்து செல்கிறது.

பௌர்ணமி நிலவிலும்
ஒளி தேயாமல் இருளில் கிடக்கிற
அந்த மாடி வீட்டை சுற்றி வருகிறது
இறுகப் பூடப்படிருகும்
அதனுடைய பழங்கால கதவின்மீது
மூர்க்கமாக மோதுகிறது
இறுகிய யன்னல்களுக்கு அருகே சென்று
உன்னிப்பாக கேட்கிறது .


வெளி சுவரில் தெறித்திருக்கும்
குருதி சுவடருகில் நின்று உருகிறது
வீட்டின் வெளிப்புறம்
ஓங்கிய மரங்களில்
இன்னும் ஒட்டிகொண்டிருக்கும்
அவல குரல்களில் தேடுகிறது
இரவுகளில்
கடற்கரையில் காலடி சுவடுகளை
பின்தொடர்ந்து
செல்கிறது
தாழம் புதர்களுள் ஒளிந்திருந்து
குருதியில் நனைகிறது


அலைகளுக்கு மேல் அலைகிறது
அவை புரட்டிவிடும் உடல்களை
திருப்பி திருப்பி தேடுகிறது
கண்கள் இல்லா உடல்களுக்கு
கண்களையும்
முகம் சிதைந்த உடல்களுக்கு
முகங்களையும் தேடி சினக்கிறது

தெருவில் வீசப்பட்ட
ஒற்றை செருப்பின் மீது
வீட்டுப் படிகளில் வீசிஎறியப்பட்ட
மூக்குக் கண்ணாடிமீது
தெரு முனையில் புரட்டி விடப்பட்ட
மோட்டார் சைகிள்ளின் மீது
தயங்கி தயங்கி நிற்கிறது


தகப்பன் தொலைந்த பிறகு
பிறந்த குழந்தைகளின்
பளிங்கு போன்ற விழிகளில்
எதிரொலிப்பது என்ன என்று தெரியாமல்
குழம்புகிறது
தாய்மாரின் கண்ணீர் துளிகளை
ஏந்திக்கொண்டு செல்கையில்
தலை குப்புற வீழ்கிறது



தூக்கு மரங்களின் கீழ்
புதைகுழிகளின் மேல்
முகாம்களின் கோடிபுரங்களில்
மேசைமீது இபோதும்
அபோது போலவே கிடக்கும்
மூடப்படாத பேனையருகில்
முற்றுப் பெறாத கடித வரிகளில்


சுவரில் தூங்கும் படங்களில்
அறையில் சிந்தியிருக்கும் ஆடைகளில்
பூவாத பூவரசுகளில்
ஈர பனையில்
ஓர கூந்தலில் ஒற்றை மலரில்

நின்று பம்பரம் போல சுழல்கிறது

காற்றிலும் வெளியிலும்
மூடப்பட்ட எல்லா இரும்பு கதவுகளிலும்
புகை கசியும் எல்லா துபபாகிகளிலும்
அறைந்து கேட்கிறது



எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடந்தது ?



நீ இபொழுது இறங்கும் ஆறு - சேரன் .

Saturday, April 4, 2009

அம்மா அழாதே


அம்மா அழாதே
நமது துயரை சுமக்க மலைகள் இல்லை
உனது கண்ணீர் கரையவும்
ஆறுகள் இல்லை

தோளிலே தாங்கிய குழந்தையை
உன்னிடம் தந்ததும்
வெடித்து துவக்கு


புழுதியில் விழுந்த உன் தாலியின் மீது
குருதி படிந்தது


சிதறிய குண்டின் அனல் வெப்பத்தில்
உன் வண்ணகனவுகள் உலர்ந்தன.


நின் கால்சிலம்பிடை இருந்து தெறித்தது
முத்துகள் அல்ல,
மணிகளும் அல்ல
குருதி
என்பதை உணர்கிற பாண்டியன்
இங்கு இல்லை.



துயிலா இரவுகளில்
"அப்பா " என்று அலறி துடிக்கிற
சின்ன மழலைக்கு
என்னதான் சொல்வாய்
?

உலவி திரிந்து நிலவை காட்டி
மார்பில் தாங்கி
"அப்பா கடவுளிடம் போனார்"
என்று சொல்லாதே


துயரம் தொடர்ந்த வகையை சொல்
குருதி படிந்த கதையை சொல்
கொடுமைகள் அழிய
போரிட
சொல்.


நீ இபொழுது இறங்கும் ஆறு - சேரன்