Monday, May 28, 2012

அணிகலன்களின் தேவதை

அணிகலன்களின்
தேவதையென்று
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
சிமிக்கியைத் தவிர

தேவதைகள் சிமிக்கி
அணிந்திருப்பார்களா
சிமிக்கி அணிந்தவர்கள்
தேவதைகளாவார்களா

தேவதைகளின் அணிகலன்
எதுவாகவும் இருக்கலாம்
அணிகலன்களே இல்லாமலும்
தேவதைகள் இருக்கலாம்

சிமிக்கியைத் தவிர
வேறெந்த நகையையும்
சொல்ல முடியாது
அணிகலன்களின் தேவதையென்று.

-தாணுபிச்சையா.
"உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்"

கவிதையின் தருணம்


மௌனமாகச்
சிறுமழை பெய்யும்
மாலை
சிற்றிரைச்சலுக்கு அடியில்
மண்டியிருக்கும் அமைதி
நேரம்
பழம் போலச்
சீராகக் கனிகிறது
மனம் கலைந்து மங்கி
முழுமையில் கரைகிறது
பேரண்டத்தின்
சிறு துளையென விரிந்திருக்கும்
என் கண்கள் முன்
ஒரு காகிதம் பறந்தாலோ
பூச்சி ஒன்று அசைந்தாலோ
கூடப் போதும்.

-பாலமுருகன்.

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை

பொன்னின் குவையெனக்கு வேண்டியதில்லை - என்னைப்
போற்றும் புகழெனக்கு வேண்டியதில்லை
மன்னன் முடியெனக்கு வேண்டியதில்லை - அந்த
மாரன் அழகெனக்கு வேண்டியதில்லை.

கன்னித் தமிழெனக்கு வேணுமேயடா - உயிர்க்
கம்பன் கவியெனக்கு வேணுமேயடா
தின்னத் தமிழெனக்கு வேணுமேயடா - தின்று
செத்துக் கிடக்கத் தமிழ் வேணுமேயடா.

உண்ண உணவெனக்கு வேண்டியதில்லை - ஒரு
உற்றார் உறவினரும் வேண்டியதில்லை
மண்ணில் ஒரு பிடியும் வேண்டியதில்லை - இள
மாதர் இதழமுதும் வேண்டியதில்லை.

பாட்டில் ஒருவரியைத் தின்றுகளிப்பேன் - உயிர்
பாயும் இடங்களிலே தன்னை மறப்பேன்
காட்டில் இலக்குவனைக் கண்டு மகிழ்வேன் - அங்குக்
காயும் கிழங்குகளும் தின்று மகிழ்வேன்.



மாட மிதிலைநகர் வீதிவருவேன் - இள
மாதர் குறுநகையில் காதலுறுவேன்
பாடி யவர் அணைக்கக் கூடி மகிழ்வேன் - இளம்
பச்சைக் கிளிகளுடன் பேசிமகிழ்வேன்.

கங்கை நதிக்கரையில் மூழ்கியெழுவேன் - பின்பு
காணும் மதுரைநகர்க் கோடி வருவேன்
சங்கப் புலவர்களைக் கண்டு மகிழ்வேன் - அவர்
தம்மைத் தலைவணங்கி மீண்டு வருவேன்.

செம்பொற் சிலம்புடைத்த செய்தியறிந்து - அங்குச்
சென்று கசிந்தமுது நொந்து விழுவேன்
அம்பொன் உலகமிர்து கண்டனேயடா - என்ன
ஆனந்தம் ஆனந்தம் கண்டனேயடா.

கால்கள் குதித்துநட மாடுதேயடா - கவிக்
கள்ளைக் குடித்தவெறி ஏறுதேயடா
நூல்கள் கனித்தமிழில் அள்ளிடவேண்டும் - அதை
நோக்கித் தமிழ்ப் பசியும் ஆறிடவேண்டும்.

தேவர்க் கரசுநிலை வேண்டியதில்லை - அவர்
தின்னும் சுவையமுது வேண்டியதில்லை
சாவில் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல் தமிழ்மணந்து வேகவேண்டும்.

-பண்டிதர் க. சச்சிதானந்தம்.

Thursday, May 24, 2012

கவிதை இறகு-வைகாசி

எல்லாவற்றையும் விழுங்கியவன்

எப்போது பார்த்தாலும்
எதையாவது
மென்று கொண்டும்
தின்று கொண்டும்
இருக்கிறான் அவன்.

முறுக்கு, சுண்டல், கடலை மிட்டாய்
பட்டாணி, மிக்சர், தட்டை
வத்தல், அப்பளம், சாக்லேட்... என
எது கிடைத்தாலும்
வாயில் போட்டுக் கொள்கிறான்.

சமையலறைக்குள் நுழைந்து
வெளியே வந்தால்
பொட்டுக் கடலையோ, சர்க்கரையோ இல்லை
ஹார்லிக்ஸ் , போர்ன்விட்டாவோ
அவன் வாயிலிருக்கும்.

இட்லி, தோசை, பொங்கல், பூரி, வடை என
எல்லாவற்றையும் சாப்பிடுகிறான்.
சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், தயிர்,
கூட்டு, பொரியல், அவியல், பச்சடி, ஊறுகாய் என
எதையும் மிச்சம் வைப்பதில்லை அவன்.

மணிக்கொரு முறை
டீயோ, காபியோ குடிக்கிறான்.
கோடை காலங்களில்
இளநீர், மோர், பழரசம், வெள்ளரி,
நுங்கு, தர்பூசணி என
வெளுத்துக் கட்டுகிறான்.

விருந்துகளுக்குச் செல்கையில்
வடை, பாயசம், ஐஸ்க்ரீம், வாழைப்பழம், பீடா என
மறுமுறை கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறான்.



எதுவும் கட்டுப்படியாகாமல் போக
ஒரு நாள்
பிளேடு, செங்கல், நட், போல்ட்,
ஆணி, உடைந்த ட்யூப் லைட் என
சாப்பிட ஆரம்பித்தான்.
அதுவும் கட்டாது போலிருந்தது.

தன பசியைத் தீர்த்துக் கொள்ள
ஓர் அரசியல்வாதியாக மாறினான்.
எல்லாவற்றையும் விழுங்கி
ஏப்பம் விட்டான்.

ஒரு நாள்
அவன் வாயைத் திறந்து காட்டச் சொல்லி
பார்த்தது
கட்சி மேலிடம்.
உலகமே அவன் வாய்க்குள் இருந்தது.


-கவிஞர் தபசி.

உடன் வேரொடு தமிழரை அழித்துவிடு


வெந்தப் புண்ணில் வேல்குத்த-படும்
வேதனை நெருப்போ எனைச்சுத்த
வந்தச் சேனல் நான்கதனை-பார்த்து
வருந்தி எழுதினேன் நானிதனை
எந்த இனமும் இன்றுவரை-உலகில்
ஏற்றதா அழிவே ஒன்றுஉரை
இந்தத் தமிழினம் மட்டுந்தான்-எனில்
எதற்கு இறைவா அழித்துவிடு

படமதைப் பார்த்து அழுதேனே-இனி
பரமனைப் போற்றி எழுதேனே
வடமலை வாழும் கோவிந்தா-நான்
வடித்த கண்ணீர் பாவிந்தா
இடமிலை எமக்கும் உம்நெஞ்சில்-நீயும்
இரக்க மின்றியா கண்துஞ்சல்!
விடமது இருந்தால் கொடுத்துவிடு-உடன்
வேரொடு தமிழரை அழித்துவிடு


மனித நேயம் போயிற்றே-ஈழம்
மண்ணொடு மண்ணாய் ஆயிற்றே
புனித புத்தர் மதமங்கே-விடுதலை
புலிகளை அழித்த முறையெங்கே
இனியொரு நாடும் உதவாது-நம்
இந்திய நாடோ பெருஞ்சூது
கனியொடு காயும் பிஞ்சிமென-மக்கள்
கதர உதிர நாளுமென

இத்தனைக் கண்டும் நன்றாக-உலகம்
ஏனோ தானோ என்றாக
மெத்தன மாக இருக்கிறதே-தமிழ்
இனத்தை அந்தோ ஒழிக்கிறதே
பித்தனாய் இறைவா பழித்தேனே-என்
பிழைக்கு வருந்தி விழித்தேனே
சித்தமும் இரங்கி வருவாயா-ஈழம்
செழிக்க வாங்கித் தருவாயா

-புலவர் சா இராமாநுசம்.

Thursday, May 10, 2012

வழுப்படு தலைப்பிலி

காவற்காரர்கள் தெருக்குதிரைகளிலே போவதைக் கண்டேன்;
குளத்திலே படகிலே முதலை தேடிக்கொண்டிருந்தார்கள்;
வானத்திலே பறவைக்கு வலைகளைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள்.
ஆமாம், நான் கண்டேன்தான்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

காவற்காரர்கள் கடந்துபோனார்கள்.
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
திருடர்களுக்குத் திருவோடு பிடிப்போரைத் தேட
திருட்டின் விபரத்தை நான் கேட்கக்கூடுமோ?
காவலின் கூறு கவனமும் காதும்
கூறெனக்கேட்பதும் கூற்றுவனாகுமோ?

அலைகின்ற நாய்களில் வெறியெது அறியாது.
"திருடர்கள் திரியலாம் திகம்பரர் உருவிலே
திருடர்கள் புரியலாம் தெரிந்தவர் வடிவிலே
திருடர்கள் உறையலாம் தீங்கிலார் மனையிலே"
திரும்பத் திரும்பச் சொன்னார்கள் காவலர்.

திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பக் அலுங்காமற் கண்டேன்
திருடர்களைக் காணவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டேன்
திருடர்களைக் கேட்கவில்லை.
திருட்டுப்போனதைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேன்
திருடர்களிடம் பேசவில்லை.

திருடரும் காவலரும் ஒருமித்த ஜாதி.
வருவார் புரிவார் அகல்வார்
ஆனால், அறியார் எனைப்போல் அரைவௌவால் ஜாதி
திருடர்கள் உருவாய் காவலர் கண்ணில்
காவலர் நாயாய் திருடிகள் முன்னில்
எனக்கென இருப்பது ஏதுமில்லை வடிவு
எனக்கென இருக்கலாது கருத்து.....

"நீ திருடர்கள் தெருவா? காவலர் பிரிவா? எது??"
எனக் கேட்டால், மனை எதுவெனச் சொல்வேன்??
இடையினமேதும் இருக்கலாகாதென்றால்,
இரு வல்லினம் நடுவே மிதிபடு மெல்லினப்புல் நான்.



-சித்தார்த்த 'சே' குவேரா.

ஒரு கிறிஸ்தவனின் விண்ணப்பம்!

எங்கள் பரமபிதாவே!

சீதனத்தில் பாதித்தொகை
ஏஜென்சிக்குப் போய்விட்டது.

அரைவருடச் சம்பளத்தின் மிச்சம்
சீட்டுக் கழிவுக்குப் போய்விட்டது.

ஒரு மாதச் சம்பளம்
இயக்கத்திற்குப் போன பின்
எனக்கென்று
ஆணிச் செருப்புக்கூட வாங்க முடியாதிருப்பதேன்?

உயிர்த்தெழுந்த யேசுவே!

வேலைக்குப் போகும் போது
தூக்கத்தில்
அருகில் இருக்கும் பெண்ணின் மேல்சாய
அவள் சிரிக்க
பதிலுக்குக் கூடச் சிரிக்க முடியாது
வேலை என்னைத் துரத்துகிறது.

எனது ஆண்டவரே!

விடியலிற்குச் சற்றுமுன் தூங்குகிறேன்
காலை எழுந்து ஓடுகிறேன்.

மிகச் சிறந்த மேய்ப்பரே!

உம்மிடம் இறைஞ்சிக் கேட்கிறேன்
எனது தேசத்தில்
என்ன நடக்கிறது?

இந்த நற்செய்தியை மட்டும்
சொல்லியருளும்
ஆமென்!!!


-சுகன்.