Wednesday, August 31, 2011

பெயரெச்சமானவள்…

ஞாபகச் சிறுவாடு

ஊறுகாய் சுமந்த மண் ஜாடி
தாத்தாவின் வெற்றிலைப் பெட்டி
கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள்
படித்துச் சிலாகித்த பாரதி கவிதை
பயந்தபடி நிற்கும் பள்ளிப் புகைப்படம்
ஆசையாய்ச் சொல்ல ஐந்தாறு கதை
சொந்த வீட்டுத் தோட்டத்து மண்
பால்ய கால நண்பரின் புது வீட்டு முகவரி
திருமணத்திற்குப் பிறகு பார்த்த படம்
இவைகளோடு...
பரம்பரைக்காய் சேமியுங்கள்
கடைசியாய் வந்த கடிதத்தையும்...

-கவிதா.

ஆவாரம்பூக்களைத் தெரிந்திருக்கவில்லை
மரமல்லியென்றால் என்ன ஸ்வீட்டா? என்கிறாள்
நல்லவேளையாய் கொன்றை மரங்களைப் பார்த்திருக்கிறாள்
பூக்கோக்களையும் ஈக்கோகளையும்
அவள் தெரிந்துவைத்துக்கொள்ளாமல் போனதில்
பெரிதாய் இழப்பேதுமில்லை
ஆனால் தெரியவில்லை என்பதை
அவள் சொல்லும்விதம் அலாதியானது
உதடு சுழித்து
தலையசைத்து
இல்லையெனும்போது
......
அவசரமாய் முத்தமிடத் தோன்றுகிறது
-அய்யனார்.

பூனையும் சூரியனும்

பூனை கண்களைத் திறந்தது
சூரியன் உள்ளே நுழைந்தது.

பூனை கண்களை மூடியது
சூரியன் அங்கேயே நின்றது.

இப்பொழுது விளங்குகிறது
இரவில் பூனை விழிக்கும் வேளை
இரண்டு சூரியத் துண்டுகள்
இருட்டில் தெரியும் வித்தை.


பெல்ஜியக் கவிதை - மோரிஸ் கரம்
தமிழாக்கம் சு.ஆ. வெங்கடசுப்புராய நாயகர்.

அது ஒரு பறவை ஒற்றைப் பனைமர உச்சியில்
தனித்தொரு பருந்தின் தவசு
அரைவட்டக் கோணத்தில்
தரைநோக்கி அலையுமதன் பார்வை
அவ்வப்போது வான் நோக்கியும்
இரை கண்டால் தரைநோக்கிப் பாய்ச்சல்
இல்லையேல் விண்ணோக்கிப் பறந்து
வட்டமிட்டு மிதக்கும்
அதுவொரு பறவை
இரை அதற்குத் தேவை மட்டும்
பறந்து களித்தலே அதன் இலக்கு.

-கவிஞர் ராஜமார்த்தாண்டன்.

கொண்டுவந்த கடல்

இந்தமுறை சங்கு கொண்டு வந்தேன்
சென்ற முறை சிப்பி.
அதற்கு முன்னால் சோழி
பாலிதீன் பைகளில்
செதில் கலந்த மணலும்,
கரைக்கோயில் குங்குமமும்
கொண்டு வந்ததுண்டு.
ஒரு முறைகூட
கடலின் பரிதவிப்பை
பரிவை ஆறுதலை
கொண்டு வர முடிந்ததில்லை.
சீசாவில் கொண்டுவந்த கடற்குஞ்சு
பாதியாகிச்
செத்துக் கிடக்கிறது அலமாரியில்.

-எம்.யுவன்(யுவன் சந்திரசேகர்).

திருவோடு ஏந்தி
தெருவழியே போனால்
சோறுதான் விழும்;
வேட்டி விழலாம்;
ஒதுங்கிக் கொள்ள
திண்ணையில் இடமும் தருவார்கள்;
நீ கேட்பது போல்
ஒருபோதும் மலர் விழுவதில்லை.

-பிரதீபன்.

பெயரெச்சமானவள்…

நதியில் உன் பெயர்
எழுதி முடிக்கும்முன்பே
நகர்ந்துவிட்டிருந்தது
நதியும் பெயரும்
விரல்களில் உன்
பெயரெச்சம்…

- தமிழ்ப்பறவை.
சல்லிக்கற்கள்

மிர்தாத், சாகுந்தலம்,
ஆழ்வார்கள், பாஷோ,
ரஷ்கின், ரஷ்புதின்,
ஹைபோ நீடில் தியரி
என்னென்னவோ பேசினான்
வழக்கம்போல டீக்காசு
நான்தான் கொடுத்தேன்.

-செல்வேந்திரன்.

ஒரு வீடு


காலம் யாருக்குங் காத்திராது நழுவுகிறது
நாற்றிசைப் பாதைகளில்
எதிர்ப்படும் மாந்தரில் எவரும்
அறிந்தவராயில்லை.
பயணங்களில்
கடக்கின்ற பிரதேசங்களின் தேசப் படங்களில்
முகவரி பற்றிய சந்தேகங்களுந் தீர்வதாயில்லை.

விரையும் வாகனத்தினூடு தென்படும்
ஊரோரக் குடில்
கையசைக்கும் சிறுமி
யாரோ கைவிட்ட ஒரு வீடு
வெளேரென்ற செம்மறியாட்டுக் கூட்டம்
சூரியகாந்திப் பூக்கள்
சிறுபழக்கடை என எல்லாமே
எப்போதோ விட்டுப் பிரிந்தவைகளையும்
அழிக்கப்படுகின்ற ஒரு வரலாற்றையும்
ஞாபகமூட்டுவதைத் தவிர்க்க முடிவதில்லை.

-விநோதினி.

என் காதலும் நானும்

இனி எனக்குப் பேச எதுவுமில்லை
வாழ்வின் மெய்மைகளையெல்லாம் களைந்துவிட்டு
இறங்கிய நதியில்
ஊர்ந்து வரும் அவன்
பருகக் காத்திருந்ததுபோல் ஆயிற்று
மரணம் சம்பவிக்கும் அவனது தேகத்தின்
எச்சில்குளத்தில் மூச்சுத் திணறுகிறேன்

ஒரே காதலின் மாதிரிகள் தாம் எல்லாமும்
எதுவும் தவறில்லை;
கனவுகளிலிருந்து பிய்த்து இழுத்துச் செல்லும்
துயரத்தின் வலிமையே
காலமாய் உருமாறுகிறது
நீரைப் பிரித்துப் பிரித்துக் களிக்கும்
அவன் பரிசளித்த மயானம்,
குருவிகள் வந்தமர ஏங்கும் எனது விழிகள்
இவற்றோடெல்லாம்
நான் என்ன செய்துவிடமுடியும்?

புத்தகங்களுக்குள் உலாவும் கதைராட்டினத்தில்
அவன் கட்டிவிட்ட முத்தங்கள்
சுழன்று உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
இனி எனக்குப் பேச எதுவுமில்லை
அவனிலிருந்து வெளியேறிப்
பறக்க வேண்டும் பிளிறி
கரையில் உலரும் எனது ஆடைகளையும்
வாரிக்கொண்டு

- குட்டி ரேவதி.

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.
கோப்பையில் குறைந்திருக்கிறது.

நான் குனிந்தபோதோ
கோப்பையல்லாத வேறெதின் மீதோ - பார்வை
குவிந்த போதோ
எவனோ எடுத்திருக்க வேண்டுமதை.

கோப்பைக்கு ஆயிரமாயிரம் நாக்குகள்
ஆயினும்
உண்மை விளம்பவியலா ஜடப்பொருளது.

கூட்டத்தை நோக்கிய என் பார்வை
சற்றே வித்தியாசமாகிப்போனது

என் கோப்பையை கடந்தவன்
என்ற காரணத்தாலே
கொலை குற்றவாளியானார்கள்
எல்லோரும்.

குறைந்திருந்த மதுவின் அளவால்
உலகை அளக்க எத்தனிக்கிறேன்.

மதுவின்,
கோப்பைகளின்,
கூட்டங்களின்,
குதூகலம் குறைந்து கொண்டே போனதெனக்கு..

என் மதுவை எவனோ அருந்தியிருக்கிறான்.

- செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி.

Sunday, August 21, 2011

காணாமல் போனவர்கள்

மாநிறம், உயரம் ஐந்தரை அடி
சற்றே மனநிலை சரியில்லாதவர்
வயது 35...
மாறுதலேதுமின்றி
காணாமல் போனவர் பற்றி சொல்லிக்கொண்டிருகின்றன வானொலிகள் இன்னும்...

நேர்மையானவர், மனிதாபிமானி,புத்திசாலி -
இப்படிப் பலர் காணாது போயிருந்தாலும்
எந்த வானொலியும் சொல்வதில்லை இவர்கள் பற்றி...

- ரமேஷ்குமார்.

ஓவியன்


லொள் லொள் என்று நாய் மாதிரிக் குரைக்குமே
அது மாதிரி ஒண்ணு வரைந்து தா
என்று சொன்னாள் சிறுமி.
ரெண்டு கால் மாதிரி வைத்துக் கொண்டு
நடக்கிறமாதிரிப் போகிற
மனிதன் மாதிரியும் ஒன்று.
வால் மாதிரித் தொங்கவிட்டு
குரங்குமாதிரித் தாவுவது.
கடல் மாதிரிக் கிடப்பதிலே
நிற்கும் கப்பல் மாதிரி.
சேப்பு சேப்பா பூ மாதிரிப் பூக்குமே
அந்த மரம் மாதிரியும் ஒண்ணு
வரைந்து தா...
அவள் சிறுமி மாதிரி
என் முன்னால் அமர்ந்திருக்கிறாள்
நான் ஓவியன் மாதிரி
வரைந்து கொண்டிருக்கிறேன்.

- யூமா. வாசுகி.

அச்சொல் என்சொல்

தேடல் தெரியாமல் ஒரு பாம்புக்குட்டியை
விழுங்கிவிட்டால் எப்படி இருக்கும்?
யாரோ சொன்னதாகத்தான் நினைவு
யார் சொன்னதென நினைவில்லை
எப்போது என்பதும் நினைவில்லை
ஆனால் சொல்லின் காலத்தெளிவும்
சொல்லியின் தொனியும்
இன்னும் பசுமையாக
நானேதான் நினைத்தேனா
என் மனசுக்குள் இருந்துகொண்டு
நானேதான் பேசிக்கொண்டேனா
தெரியாமல் விழுங்கமுடியுமா
குழப்பமே எஞ்சுகிறது
தெளிவாக வரிசையாக
யோசிக்கலாம் என்றால் எங்கிருந்து?
நிச்சயம் கனவில்லை
யார் சொல்லியிருந்தாலும்
இப்போது யாரிடமிருந்தாலும்
அச்சொல் என்சொல்.

-சொல்வனம்.