Thursday, September 23, 2010

கவிதை இறகு -புரட்டாசி


அக்காவின் பைபிள்

அக்காவின் பைபிளில் இருப்பவை:
தையல் விட்ட ரேஷன் கார்டு
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்
கந்துவட்டிக்காரர்களின் அட்டை
திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்
அண்ணன் குழந்தையின் போட்டோ
குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்
ஒரு நூறு ரூபாய் நோட்டு
எஸ்எஸ்எல்சி புத்தகம்.

அக்காவின் பைபிளில் இல்லாதவை:
முன்னுரை
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
நிலப்படங்கள்
சிவப்பு மேலட்டை.

-மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்.
தமிழில் : சுகுமாரன்

பிரியமானவன் யார்?


ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்

அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?

-(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)
சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி
தமிழில் மதுமிதா.

கதைச் சொல்லு.

கதைச் சொல்லு

கதைச் சொல்லு
எனக்கொரு கதைச் சொல்லு.
உன் கதையில்..
ஏழு கடல்கள்
இடியுடன் கூடிய புயல்
தீ கக்கும் டிராகன்
இவர்களுடன் இருக்கட்டும்
அரக்கனைப் பரிகாசம் செய்யும்
ஒரு சின்னப் பச்சைக்கிளி
முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.
இருக்கட்டும்
முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல்
ஒவ்வொரு படியிலும்
தடைக்கற்கள்
பயப்படவில்லை.
இந்த மாதிரிக் கதைகளை
எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில்
இனிமையாக வாழ்ந்ததாக
சுபமாக முடியும் என்று.

கதைச் சொல்லு
எனக்கு.
மூச்சுத் திணறும் அணைப்பில்
வேப்பமரத்தடியில்
அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..
கதைச் சொல்லு எனக்கு.

உன் கதைக் கேட்டு
அடிப்பட்ட மான் போல
துடிதுடித்து அழவேண்டும்.
கதை முடிவில்
தொலைந்து போன குழந்தைகள்
சந்தர்ப்பவசத்தால்
ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..
கதைச் சொல்லு எனக்கு.

ஒரே ஒரு ஊரில்
ஓர் இளவரசியாம்
அவளைக் காதலித்தானாம்
துணிகளை வெளுக்கும் அவன்..

இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..
கதைச் சொல்லு எனக்கு.
கதைச் சொல்லு.

- பிரதிபா நந்தகுமார்.

Wednesday, September 1, 2010

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்

- சல்மா.

Wednesday, August 25, 2010

என் கணக்குப் புத்தகம்

சூத்திரங்களாலான
என் கணக்குப் புத்தகத்தை
தொடுவதில்லை யிப்போது
தனிமங்களுக்குள்ளும்
குறியீடுகளுக்குள்ளும்
ஒரு மாயக்காரன் இருக்கிறான்.
பக்கங்களை புரட்டுகிற சமயங்களில்
சூத்திரங்களுக்கிடையே ஒளிந்தொளிந்து
தன்னுடைய உலகத்தை விரிக்கிறான்.


புதிர்கள் முளைத்த மர்ம மாளிகையாக
சூத்திரங்களின் சிக்கல்களை
அவிழ்த்தெடுக்க திராணியற்று
பிதுங்கிக் குழைகின்ற மூளைகளை
இடைவிடாமல் குழப்பமூட்டி
புத்தகத்தைத் திறக்கிற ஒவ்வொரு முறையும்
அவன் சூக்கும உடலோடு வேடம் தரிக்கிறான்.


- சிறீ.நான்.மணிகண்டன்.

என்ன ஆனார்கள்?

மகாபாரதம்
இதிகாசமானது
பகவத்கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனர்
அனைவரும்
கடவுளானார்கள்
எல்லாம் சரி
கூட்டம் கூட்டமாக
வெட்டிக்கொண்டும்
குத்திக்கொண்டும்
செத்துப்போன‌
சிப்பாய்கள்
என்ன ஆனார்கள்?

-இரா.பூபாலன்.

இலையசைத்து அவளை ஆசீர்வதிக்கிறேன்

….இரண்டடித் தொட்டிக்குள் அடங்கினாலும்
நான் ஆலமரம்தான்.
…வேரை ஒடுக்கி, கிளையை ஒடித்து
என்னைத் தொட்டிக்குள் சிறை வைத்து
வளரவிடாது தடுக்கப்பட்ட
குட்டை மரமானாலும் நானும் ஒரு ஆலமரம்.
…என் குட்டித்தனம்தான்
என் கவர்ச்சி.

அந்தக் கவர்ச்சியை ரசிக்க வருவர்
ஓராயிரம் பேர்.

ஒரு சிறுமி கேட்கிறாள்,
‘இந்த குட்டை மரத்தை
ஏன் பூமியில் வளரவிடவில்லை?’
பதில் வருகிறது.

‘அதற்கு வளர்ச்சிப் போதாது
பூமியில் வைத்தால் பிழைக்காது’
சிறுமி கைக்கொட்டிச் சிரித்தாள்,
‘பூமியில் வைத்தால்தானே வளர முடியும்’
நான் இலையசைத்து
அவளை
ஆசீர்வதிக்கிறேன்.
‘பெண்ணே நீ ஆலமரமாவாய்!’

-வத்ஸலா.