Monday, September 24, 2012

கவிதை இறகு - புரட்டாசி


இது ‘கின்லே’, என்னமோ ஈஸியா கேக்குற!

விரிந்து கிடக்கும்
தண்டவாள உதடுகளுக்கிடையே
ரயில் பெட்டிகள் பேசிக் கொள்ளும் மொழியின்
அர்த்தம் தேடி அழைந்தது மனது.

திசுக்களால் ஆன
பாராளுமன்ற வாதிகளின்  இதழ்களில் இருந்து
வெளிவரும் பட்ஜெட் உரையை விட
இரும்பு இதழ்களிலிருந்து பெறப்படும்

ரயில் பயணத்தின் ஓசைகள்
மனதுக்கு இதமானவை.
கூடவே ரயிலில்
பயணம் செய்தவர்களின் குரல்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்த் திசைதிருப்பியது
என்னை.

கொடுத்த காசுக்கு இடம்பிடிக்கத் தெரியாது
குத்துக்காலிட்டு வழியில் கிடந்த பெரியவர்
தயங்கித் தயங்கி
இருக்கையிலிருந்தவரிடம் இறைஞ்சினா.

“கொஞ்சம் குடிக்க தண்ணி தாங்க”
இரட்டுற மொழிதலில் பதில்வந்தது….

“இது பாட்டில் தண்ணிய்யா”

உள்ளுறை உவமம் அறியாப் பெரியவர்
“பாட்டில் தண்ணியா பரவாயில்லை
கொடுங்க”
என ஆவலாய்க் கை நீட்ட

“பனிரெண்டு ரூபாய் கொடுத்து வாங்கின
பாட்டில் தண்ணிய்யா
என்னமோ ஈசியா கேக்குற!”

ஈரப்பசையற்ற வார்த்தைகள் எதிர்பாய
பீறிட்டு வந்த பெரியவரின் தாகம்
தன்மானத்தோடு தொண்டைக் குழியிலேயே
தற்கொலையானது.

தண்ணீரால் ஒரு மனிதனின் இதயத்தை
இரும்பாக்க முடியும் என்ற நசவாதத்தைக்
கண்ட எனக்கு
சில இரும்பு இதயங்களை
அவலம் தாங்காது அலறும் பெட்டியின்
அர்த்தம் புரிந்தது அப்போது.

-துரை.சண்முகம்.

Tuesday, September 4, 2012

ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு


பஞ்சாரக் கோழிகள் சிறகடிப்பும்
கட்டிப்போட்ட நாய்களின் உறுமல்களும்
சின்னக் குழந்தை
ஆற்றாமையில் வடிக்கும் கண்ணீரும்
பொருள் கொள்ளாது நிகழ்கிறது
கிடையில்
ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு

-கவிஞர் சங்கரபாண்டியன்.
சந்ததிகள்
வேரறுக்கப்பட்டதை எண்ணி
புகைகிறது
அடுப்படியில்
மரம்.


-கவிஞர் சுரேஷ்.

நினைவுள் மீள்தல்

ஒளி ஓவியத்தின் ரேகைகளுள்
நான் தொலைந்து கொண்டிருக்கும்
இந்தப் பொழுதில்
நீ தலையணைக்கடியில் உன் விழிகளை
உதிர்ந்து விட்டு
ஒரு பிரமாண்டமான கனவுக்குள் புகுந்திருக்கக்கூடும்
ஒரு வனாந்தரத்தின் தனிப் பாடகனாய்
அலைந்து திரியும் எந்தன் மனசு
குளிர்காலதின் ஸ்பரிசத்தில்
என்னுள் ஊடுருவும்
உன் விம்பங்களை எதிர்பார்த்துக் கொண்ருக்கிறது

நான் அந்த இருள் படிந்த
நான்கு சுவர்களின் நடுவே
நனைந்து போன பூனைக்குட்டியைப் போல்
இருக்கின்றேன் இப்போதும்
தனித்து.

-தானா.விஷ்ணு
"நினைவுள் மீள்தல்"

பறத்தல் பறவையியல்!

திறந்திருக்கிறது சாளரம்!
பகல்களில் முட்டிமோதிய கதவது!
பற்பல கனவுகளில் கண்டிருந்த நிகழ்வது!
இறுகிக்கிடந்ததை இறுகப்பற்றி
திறந்துவிட்டது சூறைக்காற்று!

பறந்துசெல்லும் வழியறிந்தும்,
பரந்த வானம் அழைத்தும்
சிறகசைக்க மனமின்றி
சிறைப்பட்ட சிற்றறைக்குள்,
சிதறடிக்கப்பட்ட தானியங்களில்,
சிந்தை லயித்து நிற்கும்…

இயல் மறந்த பறவையதற்கு
பறவையென்ற பெயரும் எதற்கு?
பக்கமிருக்கும் சிறகுகளும் எதற்கு?

- கீதமஞ்சரி

Saturday, August 18, 2012

இன்னொன்றைப் பற்றி

ஒன்றைப் பற்றி நான் சொன்னால், அது
இன்னொன்றைப் பற்றியதாய் இருக்கிறது.
உண்மைதான்.
ஒன்றைத் தவிர்த்து இன்னொன்றைச் சொல்வது
இயலாது.
பினோஷே பற்றி எழுதுகிற போது
சுகார்த்தோ பற்றியும் மாக்கோஸ் பற்றியும்
ஹிற்லர் பற்றியும் எழுதப்படுகிறது.
சிலேயில் காணாமற் போனவன்
இன்னமும் செம்மணியில் புதையுண்டிருக்கிறான்.
மிருசுவில் புதைகுழியும் சூரியகந்தவினதும்
ஒரே கிடங்காகத் தான் தோண்டப்பட்டன.
இன்னும்
யாழ்நூலகத்தை எரித்த நெருப்பில் தான்
பாபர் மசூதியை இடித்த கடப்பாரைகள்
வடிக்கப்பட்டன.
அதே நெருப்பு ஆப்கானிஸ்தானில்
புத்தர் சிலைகளை வெடித்துத் தகர்க்கிறது.
ஷார்ப்வில் படுகொலைச் செய்தி
மிலாய் கிராமத்தின் படுகொலையையும்
ஜாலியன்வாலா பாக் படுகொலையையும்
எனக்குச் சொன்னது.
மாவீரன் பகத் சிங் தொங்கிய கயிற்றில் தானே
கயத்தாற்றில் கட்டப்பொம்மன் தொங்கினான்.
கற்சிலை மடுவில் இருப்பது, தனியே
பண்டார வன்னியனின் நினைவுச் சின்னமா?
இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஜேர்மனியில்
யூதர்கட்கான முகாங்கள் எப்போது மூடப்பட்டன?
மலேசியாவிலும் கம்யூனிஸ்ட்டுகட்கான
முகாம்களும்
தென்வியட்நாமின் மாதிரிக் கிராமங்களும்
தமிழகத்தின் அகதி முகாம்களும் எங்கிருந்து தொடங்கின?
உலகம்
ஒரு முட்கம்பி வேலியால் இரண்டாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் ஒரு தென்னாபிரிக்கனை
உள்ளே வராதே என்று சொன்ன பலகை,
ஒவ்வொரு தமிழ்க் கோவிலுள்ளும் ஒரு தமிழனை
நுழையாமல் தடுத்தது.
அமெரிக்காவின் கூ க்ளுக்ஸ் க்ளான் கையில்
ஏந்திய தீவட்டிகள் கொண்டு
கீழ் வெண்மணியில் மனிதர்
குடிசைகளுடன் எரிக்கப்பட்டனர்.
மட்டக்களப்புக்குப் போகும் வழியில்
தமிழனிடம் கேட்கப்படுகிற அடையாள அட்டையை
இஸ்ரேலிய சிப்பாயிடம் பலஸ்தீனியன் நீட்டுகிறான்
அயர்லாந்தில் ஆங்கில ஆதிக்கத்தால்
அழிக்கப்பட்ட மொழி
துருக்கியின் ஆதிக்கத்தில் உள்ள
குர்தியனின் மொழியல்லவா.
ஐ.ஆர்.ஏ. தடைசெய்யப்பட்டதாக அறிவிக்க்ப்பட்ட அன்று
குர்தியனதும் தமிழனதும் விடுதலை இயக்கங்கள்
தடைசெய்யப்பட்டு விட்டன.
ஹரி ட்ரூமன் ஹிரோஷிமாவில் எறிவித்ததும்
வின்ஸ்ற்றன் சேச்சில் ட்றெஸ்டெனில் எறிவித்ததும்
இன்றைய டீக்தாத் மீது அல்லவா விழுகின்றன.
வட அயர்லாந்தில் அமைதி காக்கப் போனவர்களே
வட இலங்கையிலும் அமைதி காத்தார்கள்.
“ஒற்றுமைகளில் அதிகம் இல்லை -
வேற்றுமையே முதன்மையானது” என்பவன் அறிவானா,
தென்னிலங்கையின் மானம்பெரிக்கும்
தமிழகத்தின் பத்மினிக்கும் இருந்த வேறுபாடு
மானம்பெரி இறந்ததும்
பத்மினி மணமானவள் என்பதுமே என?
கொடிகளின் நிறங்களும் தேசங்களின் பேர்களும்
தேசிய கீதங்களின் மெட்டுக்களும்
சீருடைகளின் நிறங்களும் வடிவமைப்பும் வேறு.
இந்த வேற்றுமைகள் கொண்டு மறைக்க இயலாத
ஒற்றுமை இருப்பதாலே தான்,
இஸ்ரேல் பற்றி எழுதினால்
சவூதி அராபிய தணிக்கை அதிகாரியும்
குர்திஸ்தான் பற்றி எழுதினால்
இலங்கை அதிகாரியும்
காஷ்மீர் பற்றிச் சொன்னால் பிலிப்பினிய அதிகாரியும்
உள்ளூர்ச் செய்திகள் பற்றிய
தணிக்கை விதிகள் மீறப்படுவதாகச் சினக்கிறார்கள்.
அது சரியானதே.
ஒன்றைப் பற்றி எழுதும் எவனாலும்
வேறொன்றைப் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடிகிறதா?

சீனத்துப் பெண்ணின் பாதங்களை இறுகப் பிணித்த
துணி அவிழ்க்கப்பட்டபோது
உடன் கட்டை ஏறிய இந்தியப் பெண்
உயிர்த்தெழுந்து நடந்தாள்.
ஒரு பலஸ்தீனப் பெண் போராளி
முழு அரபுப் பெண்ணினத்தையும் விடுதலை
செய்கிறாள்
ரஷ்யப் புரட்சி முழு ஆசியாவையும் ஆபிரிக்காவையும்
கொலனி ஆட்சியினின்று விடுதலை செய்தது.
கொலம்பியாவின் கெரில்லாப் பேராளியும்
மெக்ஸிகோவின் ஸப்பாட்டிஸ்டும்
பிலிப்பினிய மக்கள் படை வீரனும் ஒருவனே.
மறவாதே, காஷ்மீர் விடுதலைப் போராளி
ஈழத் தமிழனுக்காகத் தான் போராடுகிறான்.
எனவே
எந்த ஒன்றைப் பற்றிப் பேசும் போதும்
இன்னொன்று பற்றியும், ஏன்
எல்லாவற்றைப் பற்றியும் பேச முடிகிறது.

-சி. சிவசேகரம்.
"இன்னொன்றைப் பற்றி"

அழகாய் வேறென்ன இருக்கிறது?

இலையுதிர் காலத்தில்
எதைப்பற்றி நீ கேட்கிறாய்?
யாராலும் எழுதி விட முடியாக் கவிதை போல்
இந்தக் காதலும் நிகழ முடியாதது.
இராமனின் சந்தேகங்கள் தின்ற சீதையின்
வழி நெடுகிலும் பூக்களா உதிர்ந்து கிடந்தன?
சற்றேனுந் தயக்கமின்றி
நீண்ட தனிமைக்குத் தயாராகின்றன
முற்றத்து மரங்கள்.
எதிர்ப்பின்றி இலைகள் விழுதலை விட
அழகாய் வேறென்ன இருக்கிறது?
இப்போதைக்கு
காதல் பற்றிய கலந்துரையாடலைத் தள்ளி வைப்போம்.


-வினோதினி

ஹிம்ஸினி

ஹிம்ஸினி அவள் பெயர்.
எட்டு மணிக்குச் சந்தித்தால்
ஏழுமணிக்கு என்ன செய்தே என்பாள்.

பார்த்தால் குறைப்பார்வை
முழுக்கப்பார்க்கவில்லை என்பாள்.

பேசினால் போதாது என்பாள்
பேசுவதற்கா வந்தாய் என்பாள்

சொக்கி நின்றால் மக்கு என்பாள்
தொட்டிழுத்தால் முரடு என்பாள்

மென்மை காத்தால்
அன்பே இல்லையென்று
அநியாயப் பழி சொல்வாள்

திரட்டுப் பாலாய் திகட்டி எடுப்பாள்

முக்குளித்து முக்குளித்து மூழ்கினபின்பும்
நனையவில்லை பார் என்பாள்

நான் நிரம்பி வழிந்த அன்றைக்கும்
என் நேற்றைய தப்புக்கு அழுவாள்.

ஒரு நிமிடம் இரு
மூச்சு விடுகிறேன் என்றேன்

அவ்வளவு தான்
மூச்சடங்கிப்போய் விட்டாள்.

மிருத்யுஞ்சய ஜெபத்தில் மீட்டு
மடியில் போட்டுக்கொண்டேன்

முப்பதே நாள் பழக்கத்தில் இவளிடம்
முப்பது வருடம் கூட வாழ்ந்த ஹிம்ஸை.

எனினும் இவள் என் ஜீவ நிழல்.
என்னைப் புரட்டிபுரட்டிப்போடும்
இவள் காதலுக்கு மூன்று நிலைகள் .
உச்சம் அதி உச்சம் உன்னத உச்சம்

கொடுமையதில் என் திணறல்
எப்பொதைக்குமாக.


-மாலதி