Saturday, August 18, 2012

கவிதை இறகு -ஆவணி

குணா (எ ) குணசேகரன்

காணவில்லை
பெயர் : குணா (எ ) குணசேகரன்
வயது : 31
அடையாளம் : கன்னத்தில் காசளவு
மச்சமொன்று காணப்படும்
காணாமல் போனபோது
நீல நிற டீ-ஷர்ட்டும்
கருப்பு நிற பேண்ட்டும்
அணிந்திருந்தான்.

பேருந்து நிலைய சுவரொட்டியை படித்து
முடித்து திரும்பியபோது
எதிரே குணசேகரன் நின்றுகொண்டிருந்தான்
சற்றே மனநிலை பிசகியவர்
எனக் குறிப்பிடப்பட்டிருந்தபடியால்
தயக்கத்தோடே அணுகினேன்
ஏகதிபத்தியத்தின் அத்துமீறல்களும்
ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராய்
கண்டனம் சொன்னான்
நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறித்து
வருத்தம் தெரிவித்தான்
புறநானுற்றின் 'தொடித்தலை விழுத்தாண்டினார்'
பாடலொன்றைக் குறிப்பிட்டுப் பேசினான்
பிகாஷோ ஓவியங்களை பார்த்திருக்கிறீர்களா என
வினவினான்


பாவம் அந்த வீடு
குணாவை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறது
பாவம் குணா
அந்த வீட்டை வைத்துக்கொண்டு
என்ன செய்யப்போகிறான்
வயிற்றை நிரவிக்காட்டி
பசிக்குது என்றவனுக்கு
உணவுபசரித்துக் கொண்டிருக்கிறேன்

காண்போர் தகவல் தெரிவிக்க வேண்டிய
தொலைபேசி எண் ஒன்று
சுவரொட்டியின் கீழே தரப்பட்டுள்ளது
நீங்கள் சரியென்று சொன்னால்
அவனை வீட்டில் சேர்த்துவிடலாம்

-இசை
"உறுமீன்களற்ற நதி"

அலைவுகள்

கடந்த பேயிரவில்தான்
சமீபித்திருந்தது
குறுக்கும் நெடுக்கும்
சிறகசைத்து நெய்த
கூட்டின் மரணம்

எடுத்துப் பத்திரப் படுத்திய
அறுபட்டக் கூடென்
மேசை மேல்
சலனமற்றுக் கிடக்க
ஓயாமல் மனதிலலைகிறது
கூடறுத்தக் காற்றும்
கூட்டைத் தவறிய
பறவையின் தவிப்பும்


-பொ.செந்திலரசு

Wednesday, August 15, 2012

அவன் சொன்னது

அவன் சொன்னான் -
எப்போதாவது நினைத்தால் நூறு வயசு
எப்போதும் நினைத்தால் ஆயிரம் வயசு

எப்போதாவது நினைத்தால் புரையேறும்
எப்போதும் நினைத்தால் அதன் பெயர் ஸ்வாசம்

எப்போது நிகழ்ந்தது என்றேன் அவனிடம்
எப்போதும் நிகழ்வது என்றான்

-உமாஷக்தி .
பரிவு

என்னை மன்னிக்க நேரிடும்
கணங்களில்
ஒரு தாயின் பரிவுக்கு சென்றுவிடுகிறாய்.

எம் குழந்தையின் தலையினைக்
கோதிய படி
உன் பார்வைகளால்
எல்லாவற்றினையும் துடைத்தெறிந்துவிடுகிறாய்

எல்லாவற்றினையுமென்றால்
என் தவறுகளை,
என் மீதான கோபங்களை,
இன்னமும் இருக்கக் கூடிய ஏதேனும் எல்லாவற்றையும்

- தானா.விஷ்ணு .
மழை ஏமாற்றும்
பிறிதொரு நாளில்
செத்துப்போகும் துணிச்சலோடு
நேற்றைய மழையில்
வெடித்துச் செடியாகியிருந்தது
ஒரு விதை

-நானற்காடன்
"சாக்பீஸ் சாம்பலில்"

Thursday, July 26, 2012

ரகசிய காதல்

தன்னந்தனியனாய்
தவறவிட்ட உன்னைத் தேடி

பதற்றப்பட்டு பரபரக்க
உரத்து உன் பெயர் கூவியழைக்க
திராணி இம்மியுமில்லை
கானுயிர்கள் விழிப்புறும் பட்சத்தில்

சருகுகளின் சப்தத்தைத் தவிர்க்க
நுனிக்காலில் நகர்கிறேன்

பட்சிகளின் பொந்துகளிலும்
பட்டைகளின் இடுக்குகளிலும்
சொல்லிவைக்கிறேன் உன்னைப்பற்றி
எங்கேனும் கண்டால்
தகவல் அனுப்பவென்று

சளைக்காமல் தொடர்வேன்
அதுவரையில்
கானகத்தைத்
தீண்டாதிருக்க வேண்டும் தீ

-வி.அமலன் ஸ்டேன்லி.

வாரா மழையும்;வரளும் ஆறும்

கடவுள் வணக்கம்
தமிழ் வணக்கம் சொல்லி
கூட்டம் போட்டது போதும்

செடி வணக்கம்
பூ வணக்கம் சொல்லி
கூட்டம் போட சொல்கின்றன
வாரா மழையும்
வரளும் ஆறும்


-பாலா.

Thursday, July 19, 2012

மூடுதல்

பாழ் வெளியில்
ஓர் அரண் அமைத்து
இன்றெனைக் காக்கிறேன்

அழைப்பின்
எந்தக் குரலுக்கும்
நான் விலக்கப் போவதில்லை
எனது அரணை

என்னிடம்மிருந்ததையெல்லாம்
ஒவ்வொரு முறையும்
பலவந்தமாகப்
பறித்துச் சென்றீர்கள் .

இன்று
இச் சாய்வு நாற்காலியில்
யாருக்கும் தயங்காமல்
கால்களை நீட்டி
அமர்ந்திருக்கிறேன்

இப்பொழுதுதான்
தைரியமாய் இருக்கிறேன்
பாதுகாப்பாய் இருக்கிறேன்

யாரையும் அனுமதிக்க மாட்டேன்
என்னிடமிருந்து
எதையுமே பெற முடியாது

பொறுக்க இயலாதபடி
கத்துகிறார்கள்
சத்தமிடுகிறார்கள்
தூங்கவிடுவதே இல்லை.
எனினும் என் தனிமையை
உருவாக்குகிறேன்
இந்த இரைச்சல்களின் உள்ளிருந்து

எப்போதாவது கேட்கிறது
புதுமையாய்
வியப்பூட்டும் அழைப்பு

யாரோ
எதையோ
கொடுக்க வந்திருக்கிறார்கள்

வஞ்சகமுள்ள அழைப்புகளின்
பயங்களால்
எனது அரணை இன்னும்
வலுப்படுத்துகிறேன்

வழி தவறி வந்த
தேவதைகள் சிலவும்
திரும்பிப் போயிருக்கக் கூடும்.

-சல்மா
"ஒரு மாலையும் இன்னொரு மாலையும்"

மென் பாதங்கள்

பனிப்பாளங்களின் குளிர்ச்சியை
என் கால்கள் தாங்காது
ஆனால் அதன் முடிவில் நீயிருந்தால்
உனக்காகத் துள்ளி வருவேன்
பனிக் கதவுகள் ஒரு பொருட்டல்ல....

நடுப்பகல் சூரியக் கைகளின்
வெம்மை தாங்காது என் கால்கள்
ஆனால் எரிமலையின் உச்சியில்
உன்வீடு கட்டப்பட்டிருந்தால்
உனக்காக அக்னியில் நடமாடுவேன்
திரவகக் குழம்புகள் ஒரு பொருட்டல்ல....

மென்மைப் பூக்களை மட்டுமே
தொடுவேன் நான் ; என் கால்கள்
முட்களின் கூர்மையைத் தாங்காது
ஆனால் முட்கள் என் கால்களை
முத்தமிடுவதை நீ விரும்பினால்
சாகும்வரை அதில் நடனமாடுவேன்
முட்கள் எனக்கு பொருட்டல்ல.....

ஆனால்
உன் கோழைத்தன்மையை என்
கால்கள் பொறுத்துக்கொள்வதேயில்லை
மிதித்து அழிக்கவேவிரும்புகின்றன

காதலை சிலசமயம்
கால்களும் தீர்மானிக்கின்றன.

- கவிஞர் தாமரை .
"ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்"