Thursday, May 19, 2011

சூரியக் கம்புகள்

பண்டுபண்டொரு காலமிருந்தது
சின்னச்செடியைப் பறிக்கமுயன்றால்கூட
கதிர்கம்பெடுத்து அடிக்க வருவாளாம் காட்டுக்கிழவி

பட்சி பறவைகள் படுக்க மடிகொடுத்து நிற்கும் மரம்
அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்கும் கருடக்கொடி
விஷம் முறிக்க வளரும் வேர் பறிக்க
மரம் செடி கொடிகளிடம்
உத்தரவு கேட்டு நிற்பான் மூப்பன்

கொடுங்காற்றாய் வரும் மந்திரமூர்த்தி

ஒரு வேர் பிழுதால்
ஐந்து மரம் செடி கொடிகளை நட்டுவைக்கச் சொல்லி
பயமுறுத்திச் செல்வான்

புராதனமக்களின் தெய்வங்கள்
மரம் செடி கொடிகளாய் வளர்வதுண்டு

எந்தக் கிளை அல்லது கொடி சாபமிட்டதோ

மலைகளைச் சுரண்டித் தின்னும் மானங்கெட்ட ராச்சியத்தில்
காய்ந்த சுள்ளிகளாய் நீண்டு குத்துகிறது
சூரியக் கம்புகள்.

-என். டி. ராஜ்குமார்.

கவிதை இறகு - வைகாசி


கிழிந்ததன் நகலாய்

கடிதம்கண்டேன்.
கிழிந்துபோன வாழ்க்கையின் நகலாய்.

எண்ணெய்பிசுக்கேறிய காகிதத் துண்டில்
பழைய பற்றுவரவேட்டில் கிழித்தெடுத்ததாயிருக்க வேண்டும்.
பாதி பேனையாலும், பாதி பென்சிலாலும் எழுதப்பட்டிருந்த
நலம் விசாரிக்கும் வரிகள்
என் கைகளில் நடுங்கின.

பிசுக்கில் பதிந்திருந்த பெருவிரல் ரேகையை
உருப்பெருக்கிப் பார்ப்பதென
எழுதப்படாத துயரங்களை வரைபடம் போடுகிறது மனம்.

பிரச்சினைகளின் பூதாகாரத்துள்
கீச்சிடலுமின்றி சிறுபூச்சிகளாய் நசித்துக் கிடக்கும்
துயரங்கள் உங்களுக்குள்ளும்தான்; எங்களுக்குள்ளும்தான்

நாலுதிக்குக்கொரு உடைவாகிப்போயின நம் உறவுகள்
ஆயினும் அதிசயம்தான்
நாமும் உயிர்கொண்டு ஊர்கின்றோம்
காலொடிந்த நண்டினைப் போல்.
கரைதான் தென்படவில்லை.
தென்படுவதாய் தெளியும் பொழுதெல்லாம்
திசைமுகத்தில் பீச்சியடிக்கும்
கணவாய்மைபோலும் கறை.

கறைபடிந்த துயரத்தின் நடுவே
நாளும் நாளும் காணாமல் போகிறோம்;
இல்லையா?

இருகரையும் துயரெறிகை
உங்களைப் போலவேதான் எங்களதும்
எங்களைப் போவேதான் உங்களதும்
திரையெறியும் துயரம் இருகரையிலும்தான்.

அன்றோர் காலை
நாவெண்டாமுனையில் மீன்வாங்க நின்றிருந்தோம்
அக்கரையின் வான்பரப்பில் இரைச்சலோடு எழுந்து பறந்தன
இயந்திரப் பறவைகள்; குண்டு பீச்சிகள்.

கொட்டடிப் பக்கமாய்
கொழுந்துவிடடெரியுதென்றார்
பக்கத்தில் நின்றிருந்த முதியவர்
திசைமுகம் புகைமண்டலமாய்த் தெரிந்தது எமக்கு.
குருதிபடிந்த காலையாயிருந்திருக்கும் உங்களுக்கு.

பதறியவாறே வீட்டிற்கு வந்து
"குரலை" முறுக்கினேன்
சற்றுமுந்திய செய்திகளின்படி கொட்டடியிலும், கச்சேரியடியிலும்
குண்டு வீச்சென்றார்
சேத விபரம் தெரிந்தபின்னால் தான்
சிறிது மூச்சுவிட்டேன்.

இப்பாலிருந்து
மண்டைதீவின் பீரங்கிகள் முழங்கும் போதெல்லாம்
எங்கள் நெஞ்சு பதறும்
குண்டுவீச்சின் போதெல்லாம்
எங்கள் வீட்டின் நிலைக்கதவுகள், சன்னல்கள் மட்டுமல்ல
கூடவே எமது உணர்வுகளும் அதிர்வுறும்.

உற்றதுயர் சொல்லியழ
உரத்துப் பேச
ஒரு மனுவில்லாத் தனிக்காட்டில்
சிறகொடுக்கி குரலொடுக்கி
சீவியத்தைச்சிறைப்படுத்தி
பாடாய்ப்படுத்துகிற பாழும் மனத்தோடு போராடி
கிழிந்துபோன வாழ்வின்
இக்கரை நகலாய் நாங்கள்

எங்களதைப்போலவேதான் உங்களதும்
உங்களதைப்போலவேதான் எங்களதும்

யுத்தமுனைகளால் கிழிக்கப்பட்டு
குருதிப் பிசுக்கேறிப்போன வாழ்வின்பக்கங்களில்
எழுதப்படுமா ஒரு நற்செய்தி?

தெளிவற்றதாயிருக்கும் உங்கள் கடிதத்தின் வாசகங்கள்
மீண்டும் ஒருமுறை குரல்வழியாய் நடுங்குகின்றன.

எல்லாமே தெளிவற்றிருக்கிறது
ஆயினும்
ஒரு தீக்குச்சி உரசலின்
சிறு நம்பிக்கைத் துளியில் தெரியவரும் நற்செய்திக்காய்
காத்திருத்தல் மட்டும் தொடரும்.

காத்திருப்போம்
எல்லாத் துயரங்களின் நடுவிலேயும்.
தீக்குச்சியிலும் ஈரம்படிந்துவிடாதவாறு காப்போம்.

-சு.வில்வரெத்தினம்
"காற்றுவழிக் கிராமம்"

Wednesday, April 27, 2011

இறுதிவரைத் தொடர்ந்துக்கொண்டே


நேரு பிரதமராக இருக்கும்போது,
என் தாத்தா செருப்புத்
தைத்த்துக் கொண்டிருந்தார்.
இந்திரா பிரதமராக இருக்கும்போது
என் அப்பா செருப்புத்
தைத்துக் கொண்டிருந்தார்.
ராஜீவ் பிரதமராக இருக்கும்போது
நான் செருப்புத் தைத்துக்
கொண்டிருந்தேன்.

இறுதிவரைத் தொடர்ந்துக்
கொண்டே இருக்கிறது.
அவர்கள் பிரதமராவதும்,
நாங்கள் செருப்பு தைப்பதும்.


- உதயகுமார்.ஜி

அமர்த்தி அழகு பார்த்தோம்


நின்ற இடந்தோறும்
கடவுளையே முன்மொழிந்தோம்
மண்ணைத் தந்து
பொன்னைப் போர்த்தி
ஆயுதம் தந்து
அமானுஷ்ய பீடத்தில்
அமர்த்தி அழகு பார்த்தோம்

அனைத்தையும் தாரை வார்த்தோம்
ஒரு மயிரையும் தரவில்லை
கடவுள்!

-. தேவராஜன்.

என் ஏழுக்கழுதைகள்


எனக்கு ஏழுக்கழுதை வயசாகிவிட்டது
வளர்ந்து நடைபழகிய நாலாவது மாசம்,கக்குவான் பயத்தில்
பாலாடைக்கட்டியில் அம்மா கழுதைப்பால் ஊட்டிய தேதியில்-
என் முதல்கழுதையோடு நான் சிநேகிதம் கொண்டேன்

பசங்களோடு தள்ளுமுள்ளு நடத்தி
பள்ளிச்சீருடையில் தார்பூசி கொண்டதற்காக
அப்பா சுண்டுவிரல் பிடித்தப்போய்
வண்ணாந்துறைக் குட்டிக்கழுதைக்கு நான் பெயர்ச்சூட்டி
அழைத்த அன்றைக்கு- என் வயிற்றுகுள்
இரண்டாவது கழுதை வளர ஆரம்பித்தது

உடும்புப்பிடியவிழ்க்க ஏழுகழுதைகள் காதில்
கட்டெறுப்பை கடிக்கவிட்டு
உரக்கக் கத்திய பின், பிடியவிழுக்கும் தந்திரம் பற்றிப்
பாட்டி கதைவிட்ட அன்று
என் மூன்று கழுதைகளை உறவுக்கு விட்டேன். என்
நாலாவது கழுதையோடுதான் பாரதி அக்ரஹாரத்திற்குள் நுழைந்தான்

ஜான் ஆப்ரஹானை படித்தக் காலத்தில்
எனக்கு ஐந்துகழுதை வயசு பூர்தியாகிவிட்டது
என் ஆறாவது கழுதை வளர்ந்ததும்
ஓட்டிக்கொண்டு நகரத்திற்கு வந்துசேர்ந்தேன்

இப்போது என் ஏழாவது கழுதை
மேஜையில் உட்கார்ந்து எழுதிக்கொண்டிருக்கிறது
தீரா ஆசையை,
தீர்ந்த வாழ்க்கையை

-கடற்கரய்.

காதலின் அர்த்தத்தை நான் புரிந்துகொண்டபோது


காதலின் அர்த்தத்தை
நான் புரிந்துகொண்டபோது
மனதில் கிளை விரித்திருந்த மரங்களுக்கு
இலை உதிர்ந்து போயிற்று

என்னுடைய காதல்
அது எங்கிருந்து துவங்குகிறது
என்பதை நான் இன்னும்
கண்டுபிடிக்கவில்லை

நிச்சயமாக கண்களிலிருந்து துவங்கவில்லை
என்பதை மட்டும்தான்
இப்போது சொல்ல முடிகிறது

உன்னோடு இணைந்ததில்
கரைந்துபோன காலங்களை
"கனவுகளின் தொகுப்பு " என்று
விஞ்ஞானம் போல வரையறை செய்வதிலும்
காதல் எங்கிருந்து முளைக்கிறது
என ஆராய முனைவதிலும்
அநியாயம் ஆரம்பிக்கிறது

இரக்கமில்லாமல்
குருதியைப் பற்றிய எவ்வித நினைவுகளுமற்று
அறிவு
காதலை கொல்கிறது

இந்த இடத்தில் விவாதங்கள் வேண்டாம்
தர்க்கம், உளவியல், தத்துவ நூல்களின்
பரிசுப் பதிப்புகளை தள்ளி வையுங்கள்

நீண்ட நாள் உறவின் பின்
உன் அழைப்பைக்
கண்களில் வாசிக்கவும்
உன் துடிப்பை விரல் நுனியில் புரியவும்
இயல்பாய் முடிகிறது

இந்த இரவில்
நட்சத்திரங்களோடு சேர்ந்து
என் இதயமும் துடித்துக்கொண்டிருக்கிறது

நிர்ச்சலமான நீல ஆகாய பின்னணியில்
கடற்கரை மணலில்
உன்னுடைய நீண்ட விரல்கள்
என் கேசத்தை நீவ
உன் மார்புகளில் துயில விரும்புகிறேன்

மிகவும்
மிகவும்
மிகவும்.


-சேரன்.
"நீ இப்பொழுது இறங்கும் ஆறு"

கவிதை இறகு- சித்திரை

காதல்

இமைப்பொழுது அறிமுகத்தில்
இதயத்தை ஈதல்
விரகமெனும் நரகத்தில்
அனுதினமும் நோதல்

இரவெல்லாம் தூங்கிடாமல்
இணையின் பெயர் ஓதல்
பற்றி எறியும் நினைவுத்தீயில்
பற்றுடனே தீதல்

பூவுக்குத் தவமிருந்து
சருகாகிப் போதல்
தவங்கள் செய்து செய்து
தவணை முறையில் சாதல்

இவ்வுலகில் இவற்றுக்கெல்லாம்
இன்னொரு பெயர் காதல்.

-.சரவணன்.