Wednesday, October 20, 2010

தடம்

சன்னலோர இருக்கையில்
அமர்ந்திருந்த பேரிளம்பெண்
அவ்வளவு அழகாயிருந்தாள்

அவளருகில் அமர்ந்திருந்த கணவனை
நான் பார்க்கவும்
வானில் கடூரமாக
இடி இடிக்கவும்
சரியாகயிருந்தது

நின்றுகொண்டிருந்தவர்களின் சுமைகளை
கேட்டுவாங்கி மடியில் இருத்திக்கொண்டாள்

யாரோ ஒருவரின் குழந்தையை
ஆவல் ததும்ப வாங்கி
மடியிலிட்டு அணைத்துக்கொண்டவளின் கண்களில்
ஒரு ஏக்கம் தெரிந்தது

விதிவிலக்காக அவளொருத்தி மட்டும்
சன்னலைத்திறந்துவைத்து
மழையிடம் சிரித்துக்கொண்டிருந்தாள்

இப்போது நினைவில் மங்கிவிட்டிருக்கும்
அவள் முகம் மறந்தாலும்
என்னை உறுத்திக்கொண்டேயிருக்கும்
அவள் கழுத்திலிருந்த
சுருக்குக் கயிற்றின் தடம்

-- கல்குதிரை(பனிக்காலங்களின் இதழ்)
ஆசிரியர், எழுத்தாளர் கோணங்கி & கவிஞர் வெய்யில்

தூக்கங்களைக் களவு கொள்ளும் கனவு

இல்லையென்று பதிலளிக்கும்
எல்லோர் வீட்டின் வாசலிலும்
தூக்கங்களைக் களவு கொள்ளும்
கனவொன்றை
விட்டுச் செல்கிறார்
தொலைந்துபோன மகனை
நள்ளிரவில்
தேடியலையும் அப்பா .
-கவிஞர் கே.ஸ்டாலின்

கவிதை இறகு -ஐப்பசி

ஒரு எலக்ட்ரிஷியனின் பிரபஞ்ச தரிசனம்

ஒரு தொழிற்கல்வி நிறுவனத்தில் பயின்று
எலக்ட்ரீஷியனாக வெளியேறுகிறான்
அவனுக்கு அளிக்கப்பட்ட சான்றிதழ்
அப்படித்தான் சொல்கிறது
பழகுனராக ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து
மெல்ல மெல்ல மின்சாரத்தை அறியத்துவங்குகிறான்
கண்ணுக்குத் தெரியாத மின்சாரம் அவனுக்கு
மிகவும் வியப்பை ஏற்படுத்துகிறது
அச்சமூட்டுகிறது
மரியாதையை ஏற்படுத்துகிறது
பெருமையளிக்கிறது
மெய்சிலிர்க்கவைக்கிறது

தன் சட்டைப்பையில் வந்தமர்ந்துகொண்ட
டெஸ்டரை முதன்முறையாகப்
பெருமையாகப் பார்த்துக்கொள்கிறான்
தன்வாழ்வின் தோள்மீது
கைபோட்டு அரவணைத்துக்கொண்டு
பின்தொடரச் செய்த மின்சாரத்திற்கு
நன்றி சொல்லிக்கொள்கிறான்

யாருமற்ற அந்நேரத்தில்
மெல்ல எழுந்து
ஒரு பெரிய மெயின் ஸ்விட்சை நெருங்கி
இருகைகளாலும் பயபக்தியோடு தொட்டு
கண்ணீர் துளிர்க்கும் விழிகளில்
ஒற்றி வணங்கிக்கொள்கிறான் அந்தப் பையன்.
-.முத்துவேல்.

Thursday, September 23, 2010

கவிதை இறகு -புரட்டாசி


அக்காவின் பைபிள்

அக்காவின் பைபிளில் இருப்பவை:
தையல் விட்ட ரேஷன் கார்டு
கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்
கந்துவட்டிக்காரர்களின் அட்டை
திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்
அண்ணன் குழந்தையின் போட்டோ
குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்
ஒரு நூறு ரூபாய் நோட்டு
எஸ்எஸ்எல்சி புத்தகம்.

அக்காவின் பைபிளில் இல்லாதவை:
முன்னுரை
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
நிலப்படங்கள்
சிவப்பு மேலட்டை.

-மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்.
தமிழில் : சுகுமாரன்

பிரியமானவன் யார்?


ஒருவனிடம் பேசுகின்றனர்
இன்னொருவனைப் பார்க்கின்றனர்
வேறொருவனை நினைக்கின்றனர்

அழகிய பெண்களுக்கு
பிரியமானவன் யார்?

-(சிருங்கார சதகம் – பெண்ணில் இருமை)
சுபாஷிதம் - மஹாகவி பர்த்ருஹரி
தமிழில் மதுமிதா.

கதைச் சொல்லு.

கதைச் சொல்லு

கதைச் சொல்லு
எனக்கொரு கதைச் சொல்லு.
உன் கதையில்..
ஏழு கடல்கள்
இடியுடன் கூடிய புயல்
தீ கக்கும் டிராகன்
இவர்களுடன் இருக்கட்டும்
அரக்கனைப் பரிகாசம் செய்யும்
ஒரு சின்னப் பச்சைக்கிளி
முத்துக்களைக் கொறித்துக்கொண்டு.
இருக்கட்டும்
முடிவில்லாத சிக்கலான பாதை
வெளிவரமுடியாமல்
ஒவ்வொரு படியிலும்
தடைக்கற்கள்
பயப்படவில்லை.
இந்த மாதிரிக் கதைகளை
எனக்குத் தெரியும்.
எல்லா கதைகளிலும்
எப்போதும்
கடைசியில்
இனிமையாக வாழ்ந்ததாக
சுபமாக முடியும் என்று.

கதைச் சொல்லு
எனக்கு.
மூச்சுத் திணறும் அணைப்பில்
வேப்பமரத்தடியில்
அவன் கனவுகள் விழித்தெழுந்ததை..
கதைச் சொல்லு எனக்கு.

உன் கதைக் கேட்டு
அடிப்பட்ட மான் போல
துடிதுடித்து அழவேண்டும்.
கதை முடிவில்
தொலைந்து போன குழந்தைகள்
சந்தர்ப்பவசத்தால்
ஒருவரை ஒருவர் சந்திக்கட்டும்..
கதைச் சொல்லு எனக்கு.

ஒரே ஒரு ஊரில்
ஓர் இளவரசியாம்
அவளைக் காதலித்தானாம்
துணிகளை வெளுக்கும் அவன்..

இந்தக் கதையில் கற்பனை இருக்காதே..
கதைச் சொல்லு எனக்கு.
கதைச் சொல்லு.

- பிரதிபா நந்தகுமார்.

Wednesday, September 1, 2010

கோணம்

நான்
தலைகீழாகத் தலைவாரிக்கொண்டிருப்பதை
தலைகீழாகச் சமைப்பதை
தலைகீழாக உணவருந்துவதை
தலைகீழாக அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டுவதை
தலைகீழாக புத்தகம் வாசிப்பதை
தலைகீழாகவே நின்று
தன்னை உற்றுப் பார்ப்பதை
அச்சத்துடன் வியந்து பார்த்தபடியிருக்கிறது
தோட்டத்து விருட்சத்தில் காய்த்துக் கிடக்கும்
வௌவால்

- சல்மா.